Header Ads



தாமரை கோபுரம் நிறுவும்போது 2 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்ததென்ன்பது தெரியாது - ஜனாதிபதி

கொழும்பு நகரை அலங்கரிக்கும் வகையிலும், இலங்கையை ஒரு பாரிய தொலைத் தொடர்பு நாகரிகத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், தெற்காசியாவில் நவீன வசதிகளுடன் கூடிய உயரிய கோபுரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயினால் இன்று (16) மாலை திறந்து வைக்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி , இந்த கட்டிடமானது இலங்கையின் தொலைத் தொடர்பாடல் துறையில் புதியதோர் திருப்புமுனையாகும் என்றும், கட்டிடத் தொழிநுட்பத்துறையில் புதியதோர் பாய்ச்சலுமாகும் என்றும் தெரிவித்தார். 

ஒரு தேசிய வளமாகவும் தொலைத் தொடர்புத் துறையின் ஒரு திருப்பு முனையாகவும் இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பணி குறித்து மகிழ்ச்சி அடைவதைப் போன்று இதற்கு பின்னால் உள்ள கதை அவ்வளவு தூரம் மகிழ்ச்சியடையக் கூடிய ஒன்றல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

உத்தேச மொத்த செலவு 19 பில்லியன் ரூபாவான கொழும்பு தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகளுக்காக 16 பில்லியன் ரூபாவை இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்குவதற்கு சீனாவின் EXIM வங்கி உடன்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டிற்கமைய இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் 2012.01.03 ஆம் திகதி சீனாவின் CEIEC மற்றும் ALIT ஆகிய நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்குமிடையே ஒரு முத்தரப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. 

இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்த போதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த நிறுவனத்தின் முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின. 

அதன் பெறுபேறாக சீனாவின் EXIM வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் கடன் 12 பில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் அதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்கடன் தொகைக்காக ஒவ்வொரு வருடமும் கடன் தவணைப் பணமாக 2400 மில்லியன் ரூபா அதாவது 240 கோடி ரூபா பணத்தை இலங்கை செலுத்தி வந்தது. 

2018 ஆம் ஆண்டுக்காகவும் இலங்கை அக்கடன் தவணைக்கான 240 கோடி ரூபாவை செலுத்தியுள்ளதுடன், அதனை இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு அவ்வாறே வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டுக்கான கடன் தவணைப் பணத்தில் முதலாவது அரையாண்டுக்கான 120 கோடி ரூபா தற்போது செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தாமரைக் கோபுரத்தின் அடுத்தகட்ட நிர்மாணப் பணிகளுக்கு மேலும் 300 கோடி ரூபா தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வளத்தை பாதுகாக்க வேண்டியதன் பொறுப்பு பற்றி சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக அதனை ஒரு அரச நிறுவனமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். 

அதற்காக பணிப்பாளர் குழு ஒன்றை அமைத்து தனியார் நிறுவனம் ஒன்றையொத்த வகையில் செயற்படும் அரச நிறுவனமாக நடாத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இன்றைய தினம் திறந்து வைக்கப்படும் கொழும்பு தாமரைக் கோபுரத்தின் அடித்தள பரப்பு 45 மீற்றர்களாகும் என்பதுடன், உயரம் 356 மீற்றர்களாகும். 

கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள என்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் என்டனா வடக்கே 60 கிலோ மீற்றரும், தெற்கே 60 கிலோ மீற்றரும், கிழக்கே 50 கிலோ மீற்றரும், மேற்கே 15 கிலோ மீற்றரும் செயல் எல்லையை கொண்டதாகும். 

இதில் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 50 எப்.எம் அலைவரிசைகளும் தொலைத்தொடர்பு செயற்பாட்டாளர்களுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப திட்டமிடல் 2008 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதுடன், 2012 ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. திட்டத்தின் தலைமை ஆலோசனை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது. 

பொறியியல் துறை கொங்கிரீட் தொழிநுட்பம், உயர்ந்த கட்டிட நிர்மாணத்துறை மின் பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை நிபுணர்கள், பொறியியலாளர்கள் 70 க்கும் மேற்பட்டவர்கள் இதற்கு பங்களிப்பை வழங்கிவருவதுடன், அரச தனியார்துறை பல்கலைக்கழகங்களில் கல்விகற்றுவரும் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள், மாணவர்கள் களப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது. 

கொழும்பு தாமரைக் கோபுரத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தாமரைக் கோபுரத்திற்கான இணையத்தளத்தையும் ஜனாதிபதியினால் இதன்போது திறந்து வைத்தார்.

ஜனாதிபதிக்கும் சீன பிரதிநிதிகளுக்கும் இடையே நினைவுப் பரிசில்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. 

No comments

Powered by Blogger.