ஜனாதிபதி தேர்தல் என்பது குறுந்தூர ஓட்டப்போட்டி, நாமலின் நலனுக்காகவே பொதுஜன பெரமுன உருவானது
ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி தேர்தலுக்கு முழுமையான தயார் நிலையில் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் என்பது குறுந்தூர ஓட்டப்போட்டி போன்றதாகும். ஆகவே ஜனாதிபதி தேர்தல் நெருங்கியவுடன் எமது வேட்பாளரை அறிவிப்போம். கட்சியின் சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்பட்டாலும் அவருக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம்' என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்தார்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அந்தரங்க உடன்படிக்கைகளை மேற்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எவருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார் என்றும் அவர் குற்றஞ்சுமத்தினார். அலரி மாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முழுமையாக தயார் நிலையிலேயே உள்ளது. கடந்த நான்கரை வருடங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி பலாலி விமான நிலையம் திறந்துவைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் சர்வதேசத்துடனான எமது தொடர்புகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அதற்கு மேலதிகமாக ஒக்டோபர் 30ஆம் திகதி குளியாப்பிட்டி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கல்லூரியை திறந்து வைக்கவும் எதிர்பார்த்துள்ளோம். கம்பெரலிய வேலைத்திட்டத்தினூடாக வெகுவிரைவாக கிராமப் புறங்களில் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளை நிறைவு செய்யும் வேலைத்திட்டங்கள் இடம்பெற்றே வருகின்றன.
இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் சகலரும் எங்களிடம் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரா என்று வினவுகின்றனர். இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவை வென்ற சிறந்த தலைவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். கடந்த வருடம் இடம்பெற்ற 52 நாள் அரசியல் நெருக்கடியின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பக்கபலமாக இருந்து நீதியான முறையில் அரசாங்கத்தை பாதுகாப்பதற்கும் எங்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். அதேபோன்று ஜனாதிபதி தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து பயணிக்க தயாராகவே இருக்கின்றனர்.
இந்த தடவை ஜனாதிபதி தேர்தல் இலகுவானதாக அமையப் போவதில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியை போன்று எங்களின் கட்சியில் எந்த முரண்பாடும் கிடையாது. ஆகவே கூட்டணியின்றி தனித்து போட்டியிடும் எவராலும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. தற்போதைய நிலைமைகளில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக் ஷவை சந்தைப்படுத்துவதிலும் அந்த பிரிவினர் சிக்கலை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் குறுந்தூர ஓட்டப் போட்டியை போன்றதாகும். ஆதலால் இதனை மரதன் ஓட்டப்போட்டி போன்று கருதி தேர்தலுக்கு தயாராகுவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. 2015 ஆம் ஆண்டும் தேர்தல் காலம் நெருங்கியவுடனேயே எங்களின் வேட்பாளரை அறிவித்தோம். இம்முறையும் தேர்தல் காலம் நெருங்கியவுடனே எங்களின் வேட்பாளரை அறிவிப்போம். அவ்வாறே வேட்பாளர் யாராக இருந்தாலும் இந்த தேர்தலில் நிச்சயமாக வெற்றியடைவோம்.
கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் நிறைவுக்கு வந்துள்ளன. பங்காளிக் கட்சிகளும் எங்களுடன் பயணிக்க தயாராக இருக்கின்றன. புதிதாக தமது வாக்கு உரிமையை பிரயோகிக்கவுள்ள இளைஞர்கள் 11 வருடங்களுக்கு முன்பாக இருந்த ஆட்சியை மறந்திருப்பார்கள். அதனை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. கோத்தபாய ராஜபக் ்ஷவின் சகல கருத்துக்களும் தூக்கத்திலிருந்து எழுந்து பேசுவதை போன்றதாகும். தான் கூறும் விடயங்கள் மாத்திரமே ஊடகங்களில் வெளியாக வேண்டும் என்று கருதுகிறார்.
கோத்தபாய ராஜபக் ்ஷவின் உத்தரவின் காரணமாகவே எனது தந்தையை நான் இழந்தேன். அதனை மேர்வின் சில்வாவும் தனது வாக்கு மூலத்தினூடாக வெளிப்படுத்தியிருந்தார். ஆகவே அவரது செயற்பாடுகளால் நான் தனிப்பட்ட ரீதியில் பாதிப்படைந்துள்ளேன்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ்ஷவின் அரசியல் எதிர்காலத்துக்காகவும் குடும்ப நலனுக்காகவுமே பொதுஜன பெரமுன என்ற கட்சி தோற்றம் பெற்றது. ஆகவே கோத்தபாய ஜனாதிபதியானால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்று உணரக்கூடியதாக இருக்கும். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைகளிடம் இன்று ஊடகங்கள் கேள்வி கேட்பதைப் போன்று கோத்தபாயவின் ஆட்சி வந்தால் அதற்கு இடம் கிடைக்கப்போவதில்லை.
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், யார் வேட்பாளராக நியமிக்கப்பட்டால் வெற்றியடைய முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: எனக்கு என்றுமே கட்சியின் தலைமைத்துவத்துடன் நெருக்கம் இருந்தது கிடையாது. தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களின் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயரும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவர்களில் யார் வேட்பாளரானாலும் எங்களின் ஆதரவை வழங்குவோம். கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முன்னெடுத்து வந்தார்.
தற்போதும் கட்சியை இரண்டாக்கும் முயற்சிகளையே ஜனாதிபதி முன்னெடுத்து வருகிறார். ஜனாதிபதி தேர்தல் குறித்து ஐக்கிய தேசிய கட்சியிலுள்ள ஒருசில உறுப்பினர்களிடம் அவர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அந்தரங்க உடன்பாடுகளை வைத்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் எவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை. கட்சியின் சகல தலைவர்களும் ஒன்றுகூடி கலந்துரையாடி எடுக்கும் தீர்மானங்களை கட்சியின் சகல உறுப்பினர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.
Post a Comment