Header Ads



மகிந்தவின் காலை பிடித்து ஐயா, நடந்ததை மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள் என கேட்க வேண்டுமா?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சு பதவிகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கும் பின்னணியில், அவர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் கூட்டணி அமைக்க முடியாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தெஹிவளை தொகுதியின் பிரதான அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் சென்று மண்டியிட்டு, மகிந்த ராஜபக்சவின் காலை பிடித்து ஐயா, நடந்தவற்றை மறந்து விடுங்கள், மன்னித்து விடுங்கள் என்று கேட்க வேண்டுமா? தேவையில்லை. இப்படியான கருத்துக்களை நான் கூறும் போது, நானே அனைத்தையும் குழப்புகிறேன் என்று என்னை திட்டுகின்றனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியில் இணையும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது அடையாளத்துடன் இணைய வேண்டும். அப்படியில்லை என்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் நாம் கறைந்து விடுவோம்.

அரசாங்கத்தை அமைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காக பணியாற்றிய நாங்கள் துரோகிகளானோம், அவர்கள் வீரர்களாக மாறினர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை செய்ய வேண்டும் என்று நான் கூறுகிறேன்.

52 நாட்களுக்கு அதனை செய்ய முடிந்தது என்றால், தற்போது ஏன் முடியாது. ரணில் விக்ரமசிங்க போன்று நாங்கள் கீழ்புறமாக கத்தியில் குத்தவில்லையே.

பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களுக்கு ஆத்திரம். அந்த ஆத்திரத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு, மைத்திரி ஜனாதிபதி மகிந்த பிரதமர் என்ற முடிவுக்கு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை நன்றாக ஆட்டத்தை ஆட முடியும்.

ஜனாதிபதியும், பிரதமரும், முக்கிய அமைச்சர்களும் அந்த அணியினருக்கு என்றால், நாம் எப்படி வேலை செய்ய முடியும். ராஜபக்ச குடும்ப ஆட்சி 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது. அதனை விட பெரிய குடும்ப ஆட்சியை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

எமக்கும் நிலைப்பாடுகள் உள்ளன. வெறுமனே சென்று அடிமைகள் போல் இருக்க முடியாது. தற்போது தூள்காரர்கள் மன்னராவும் மைத்திரி கீழ் நிலைக்கு சென்றுள்ளார்.

இலங்கை வரலாற்றில் மரண தண்டனைக்கு எதிராக எவரும் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தனரா? எனினும் தற்போது அவ்வாறான வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுவே தூள்காரர்கள் மன்னராவதற்கும் மைத்திரி கீழ் நிலைக்கு செல்லவும் காரணம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.