Header Ads



அடுத்த வருடம் இதே மாதத்தில் நிச்சயமாக புதிய ஜனாதிபதியும், அரசாங்கமும் இருக்கும் - நாமல்

நாட்டில் ஏற்பட்டிருக்கும் மின்சாரப் பிரச்சினையின் பின்னணியில் ஏதேனும் சதித் திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று -06- செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

தற்போது நாட்டில் மின் பிரச்சினை நிலவி வருகிறது. இதன் பின்னணியிலும் ஏதேனும் சதித்திட்டமொன்று இருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாம் எமது பயணத்தை இன்னும் பலப்படுத்தியுள்ளோம். புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.

அடுத்த வருடம் இதே மாதத்தில் நாட்டில் நிச்சயமாக புதிய ஜனாதிபதியும், அரசாங்கமும் இருக்கும். அரசாங்கம் தற்போது பலமிழந்துவிட்டது. அரசாங்கத்துக்கு எதிரான குரல்களை ஒடுக்கும் செயற்பாட்டையே தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 4 வருடங்களில் நாம் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்தோம். இந்த நல்லாட்சி அரசாங்கம் வந்ததிலிருந்து நாட்டில் பொருளாதாரம், சமூகம், அரசியல் ரீதியிலான பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

அரச சொத்துக்களை விற்பது, அரச நிறுவனங்களை நஷ்டத்தில் இயங்கச்செய்து அதனை தனியாருக்கு விற்பனை செய்வது என அனைத்தையும் மேற்கொண்டுள்ளது.

தற்போது அரச காணிகளையும் விற்பனை செய்து வருகிறது. இன்னொரு பக்கம் எம்மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகிறது.

ராஜபக்சவினருக்கு டுபாயில் வங்கிக் கணக்கு உள்ளதாகவும், அங்கு கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளும் இந்த அரசாங்கம், மக்களுக்கென ஏதேனும் நன்மைகளை மேற்கொண்டுள்ளதா என்பது சந்தேகமே.

இவ்வாறான நிலையில், எமது பயணத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்று நாம் அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.