Header Ads



கோத்தபாய ஜனாதிபதியாக வருவாரானால், இலங்கையின் அழிவுக்குரிய காலமாகவே அது அமையும்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதை தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வார இறுதி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கோத்தபாய ராஜபக்சவை தமிழ் மக்கள் ஓர் கொலையாளியாகவே பார்க்கின்றனர். எனவே, அவர் ஜனாதிபதியாக வருவதை தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

கோத்தபாய ஜனாதிபதியாக வருவாரானால் இலங்கையின் அழிவுக்குரிய காலமாகவே அது அமையும். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வது தமிழர்களுக்கு மாத்திரமன்றி இலங்கையின் பெரும்பான்மையினங்களுக்கும் பாதகமாக அமையும்.

தமிழர்களின் வாக்குப்பலம் கடந்த தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் தேர்தல் வரலாற்றை நோக்கினால், ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்கள் வாக்களிக்காததால்தான் தோற்றுப் போயிருக்கின்றார்.

மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோற்றுப்போவதற்கும் தமிழர்கள் அவருக்கு வாக்களிக்காததுதான் காரணமாக அமைந்தது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால வெல்வதற்குக் காரணமாக அமைந்ததும் தமிழர்களின் வாக்குப் பலம்தான்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.