Header Ads



இருப்பதை உதறித் தள்ளிவிட்டு, எங்கே போவது..? இப்படிக் கேட்கிறார் நஸீர் அஹமட்

நல்லாட்சியின் பக்கம் சார்ந்து நமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை விட வேறு தெரிவு நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியல் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துக் கேட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுபான்மைச் சமூகத்திற்கு ஏற்பட்ட கடந்த கால இழப்புக்கள், பல்லினக் கலாச்சார பண்பாடுகள், விழுமியப் பண்புகள் மற்றும் 30 வருடகால இழப்புக்களில் இருந்து மீண்டெழும் தன்மை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தமது போக்கை ஆக்கபூர்வமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

எமது தனித்துவத்தைப் பாதுகாக்கின்ற அதேவேளை நடப்பு உலகப்போக்குகளை உணர்ந்து செயற்பட்டு எமது அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும்.

எல்லாவற்றையும் எதிர்க்கும் மனோபாவத்தை விட, இருப்பதில் நல்லதை அங்கீகரிக்கும் மனோபாவம் எல்லோரையும் வாழவைக்கும். இதுபற்றி நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.

விட்டுக் கொடுப்புக்களோடு நல்லதைச் சிந்திக்கின்ற அதேவேளையிலே சிறுபான்மைச் சமூகம் அறிவார்ந்த அரசியல் முன்னெடுப்புக்களினூடாக ஒரு படியிலாவது ஏறி முதலில் கால் வைக்க வேண்டும்.

அதை விடுத்து எடுத்தேன், கவிழ்த்தேன் போக்கில் தற்போது இருக்கும் படிக்கட்டில் இருந்தும் கீழிறங்கி ஏறவே முடியாத ஒரு நிலைக்குச் சென்று விடக் கூடாது.

கடந்த கால அரசியல் உசுப்பேற்றல்கள் எமக்கு எதனையும் பெற்றுத் தரவில்லை. மாறாக இழப்புக்களையே சன்மானமாகத் தந்தது என்பதை சிறுபான்மைச் சமூகம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

சிறுபான்மை இனம் தொடர்ந்தும் எதிர்த்து நிற்கும் போக்கைக் கடைப்பிடித்தால் திட்டமிட்டவகையில் சிறுபான்மையினருக்கான தீர்வு இழுத்தடிக்கப்படலாம்.

அத்தகைய ஒரு சூழ்நிலையை நாமாக அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடக்கூடாது. திட்டவட்டமாக எந்தவொரு தீர்வும் இதுவரைக் கிடைக்கப்பெறாத போதிலும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நாம் காய் நகர்த்த வேண்டியுள்ளது.

கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்போதைய நல்லாட்சியின் பக்கம் சார்ந்து நமக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை விட வேறு தெரிவு நம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.

இருப்பதையும் உதறித் தள்ளி விட்டு எங்கே போவது? இதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.