Header Ads



"For Necessary Action" என்ற குறிப்புடன், கீழ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பெறப்பட்ட உளவுத் தகவல்கள் கையாளப்பட்ட விதத்தைச் சுட்டிக்காட்டி, முக்கியமான உத்தியோகப்பூர்வ ஆவணங்களை "FNA" (தேவையான நடவடிக்கைக்காக - For Necessary Action) என்ற குறிப்புடன் வெறுமனே கீழ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.


முக்கியமான உளவுத் தகவல்கள் கிடைக்கும்போது, அதிகாரிகள் அதை வெறுமனே மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பை நேரடியாக ஏற்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


2019 ஏப்ரல் 9 அன்று அப்போதைய அரச புலனாய்வுச் சேவையின் தலைவரால் அனுப்பப்பட்ட தீவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முக்கியத் தகவல், அப்போதைய காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் "FNA" என்ற குறிப்புடன் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரிவு உட்பட நான்கு பிரிவுகளுக்கு வெறுமனே அனுப்பி வைக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இத்தகைய ஆபத்தான தருணங்களில் வெறும் குறிப்பை எழுதி அனுப்புவது மட்டும் போதுமான நடவடிக்கையாகுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்கூட்டியே உளவுத் தகவல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், கடமை மற்றும் பொறுப்புள்ள அதிகாரிகள் வெறும் "FNA" என எழுதி ஆவணங்களை நகர்த்துவது மட்டுமே தமது கடமை என கருதக்கூடாது என்பதற்கு இந்தச் சம்பவமே சிறந்த சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.