பல ஆண்டுகளுக்குப்பின் அரச வருவாய் ட்ரில்லியன் கணக்கில் அதிகரிப்பு
பல ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதிக்கான தடையை நீக்கியதன் மூலம், 2026 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கத்தின் வருவாய் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.
நிதி அமைச்சின் புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் பெறப்பட்ட மொத்த அரச வருமானம் மற்றும் மானியங்கள், 2025 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 27.1 சதவீதம் அதிகரித்துள்ளன.
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட மொத்த வருமானம் மற்றும் மானியங்களின் மதிப்பு 2.956 ட்ரில்லியன் ரூபாயாகும். இது 2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வருமான இலக்கான 5.3 ட்ரில்லியன் ரூபாயில் 55.8 சதவீதத்தை எட்டியுள்ளமையைக் காட்டுகிறது.
மானியங்கள் தவிர்த்து, அரசாங்கத்தின் நேரடி வருமானம் மாத்திரம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2,321.7 பில்லியன் ரூபாயாக இருந்த வருமானம், இந்த ஆண்டின் அதே காலப்பகுதியில் 2,954.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment