மனிதர்களின் மூளையைப் பாதுகாக்க அல்லாஹ் செய்துள்ள ஏற்பாடு
இந்தப் படம், மனித மூளையைப் பாதுகாக்கும் அடுக்குகளை அழகாகக் காட்டுகிறது. இது, "மூளையின் கண்ணுக்குப் புலப்படாத கேடயம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த அடுக்குகள் பற்றிய சிறு விளக்கம்:
1. மண்டையோடு. வலிமையான முதல் அரண். இதன் பஞ்சு போன்ற உள் அமைப்பு, நேரடி வெளிப்புற அதிர்ச்சிகள், அடிகளிலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது.
2. டியூரா மேட்டர். மண்டையோட்டுக்கு நேர் கீழே அமைந்துள்ள ஒரு தடிமனான நார் போன்ற, மிகவும் கடினமான சவ்வு. இது ஒரு வலிமையான பாதுகாப்பு உறை. மூளையிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தை வெளியேற்றும் முக்கிய குழிகள் இதில் உள்ளன.
3. அராக்னாய்டு மேட்டர். சிலந்தி வலையைப் போன்ற ஒரு மெல்லிய, ஒளிபுகும் சவ்வு. இது மூளையுடன் ஒட்டாமல், ஒரு தளர்வான உறை போல அதைச் சூழ்ந்துள்ளது. இதற்கு நேர் கீழே சப்அராக்னாய்டு இடைவெளி உள்ளது, அதற்குள் மூளைத்தண்டுவடத் திரவம் பாய்கிறது. இந்தத் திரவம் ஒரு அதிர்வு உறிஞ்சியாக செயல்பட்டு, திடீர் அசைவுகளின் போது மண்டை ஓட்டுடன் மோதுவதிலிருந்து மூளையைப் பாதுகாக்கிறது.
4. இரத்த நாளங்கள். அடுக்குகளுக்கு இடையில் பரவியிருக்கும் சிக்கலான வலைப்பின்னல். மூளை செல்களுக்கு ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்களை வழங்கி, கழிவுப் பொருட்களை அகற்றுகிறது. இந்த வலைப்பின்னல் உயிருக்கு இன்றியமையாதது.
5. பையா மேட்டர். இது மூளையின் மேற்பரப்பில் நேரடியாக ஒட்டிக்கொண்டு, அதன் இடுக்குகள், மடிப்புகளுக்குள் பரவியிருக்கும் மிகவும் மெல்லிய சவ்வு. இது, மூளையின் மேற்பரப்புத் திசுக்களுக்கு ஊட்டமளிக்கும் இரத்த நாளங்களைக் கொண்டு செல்லும் ஒரு மெல்லிய உறையாகச் செயல்படுகிறது.
6. மூளை. இந்த அனைத்து அடுக்குகளாலும் பாதுகாக்கப்படும் உணர்திறன் மிக்க மைய உறுப்பு. முழு உடலுக்குமான கட்டுப்பாட்டு மையம். இந்த பாதுகாப்பு அரண்தான் மூளையை உடல்ரீதியான அடிகளிலிருந்தும் நுண்ணுயிரிகளிடமிருந்தும் பாதுகாக்கிறது.
இந்த சவ்வுகள் வைரஸ்களால் பாதிக்கப்படும்போது, மூளைக்காய்ச்சல் நோய் ஏற்படுகிறது.
சுமார் 1.3 கிலோ எடை கொண்ட மூளையைப் பாதுகாக்க அல்லாஹ் செய்துள்ள ஏற்பாடுகளைப் பாருங்கள்.
இத்தனை ஏற்பாடுகளும் எதற்காக? சிந்தித்து செயல்படுவதற்காக மட்டுமே. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ, ரீல்ஸ் பார்த்தோ செயல்படுவதற்காக அல்ல.
அதனால்தான், "சிந்திக்க மாட்டீர்களா?”என்று அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கேட்கிறான்.
நூஹ் மஹ்ழரி

Post a Comment