Header Ads



மத்திய கிழக்கில் நிலவும் போர் இலங்கை பொருளாதாரத்தில் பெரும் தாக்கம்


மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் உலகப் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடிக்கு வழிவகுக்கும் எனவும் இது இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


இது குறித்து ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ ஆய்வுகள் பீடத்தின் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தைப் பாதிப்பதோடு, இலங்கையைப் போன்ற நாடுகளுக்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டின் பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமடைந்துள்ளதாக கூறப்பட்டாலும், மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் முன்னேற்றமடையவில்லை.  தற்போது பணவீக்கம் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.


எனினும் கையிருப்பு 4 பில்லியன் டொலராக உள்ளதாக அரசு கூறினாலும், அது தற்காலிகமானதாகும்.


ஜனவரி தரவுகளின்படி, தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதம் 16,730 ரூபாய் அவசியமாகும். ஒரு குடும்பத்திற்கு மாதம் 70,000 - 80,000 ரூபாய் வருமானம் இல்லை என்றால் தற்போதைய சூழலில் வாழ்வது கடினம்.


மத்திய கிழக்கு மோதல்களால் தொழில்கள் இழக்கப்பட்டால், இலங்கைக்குக் கிடைக்கும் முக்கிய வருமானமான அந்நிய செலாவணி குறையும். வான்வழிப் போக்குவரத்துப் பாதிப்புகளால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம் சரியக்கூடும்.


உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்தால், இலங்கையிலும் எரிபொருள் விலை உயர்ந்து மின்சாரம் மற்றும் போக்குவரத்துப் பாதிக்கும்.



போர்ச் சூழலால் ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிக்கான சர்வதேச கேள்வி குறையும் அபாயம் உள்ளது. அதிக வரிப்பளு மற்றும் பொருளாதார நெருக்கடியால் வைத்தியர்கள், விரிவுரையாளர்கள் போன்ற புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.


பொருளாதாரத்தை முன்னெடுக்கும் மத்தியதர வர்க்கத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள வரிப்பளு குறைக்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் ஒரு சிறு கும்பலுக்கு மட்டுமே கிடைப்பதாகத் தரவுகள் காட்டுகின்றன.


அரச வங்கிகளிடம் உள்ள மேலதிகப் பணத்தை முடக்கி வைக்காது, நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும். சர்வதேச மோதல்கள் தீவிரமடைந்தால், இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் அதலபாதாளத்திற்குச் செல்லும் வாய்ப்புள்ளது.


மக்கள் மீதான வரிப்பளுவைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதன் மூலமே நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.