Header Ads



1,200 கோடி பெறுமதியுடைய போதைப்பொருள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்


தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட, ரூ. 1,200 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய 650 கிலோ கிராம் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகின் உரிமையாளரான பெண்ணும், அவரது மகனும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அம்பலாங்கொடை பகுதியில் பதுங்கியிருந்த போதே இவ்விருவரும் கடந்த 16-ம் திகதி கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


ஏற்கனவே கைது செய்யப்பட்ட படகின் மாலுமி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தாய் மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்தப் போதைப்பொருள் தொகுதியை கடத்துவதற்காக படகு மாலுமிக்கு மட்டும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த பாரிய கடத்தலின் பின்னணியில் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'அங்கோட பிரியங்கர' மற்றும் 'தினூக' ஆகியோரே செயற்பட்டுள்ளனர். கடத்தல் பணிகளை 'பரேவி சுதா' என்பவர் ஒருங்கிணைத்துள்ளார்.


விசாரணைகளின்படி, அங்கொட பிரியங்கரவுக்கு சொந்தமான 1,000 கிலோ கிராம் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை 'பரேவி சுதா' பொறுப்பேற்றிருந்தார். இதில் முதற்கட்டமாக 320 கிலோ கிராம் போதைப்பொருள் சில மாதங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ கடற்கரையில் வைத்து கைப்பற்றப்பட்டது.


இந்த சுற்றிவளைப்புக்கு ஒற்றுக் கொடுத்தவரின் தலையைத் துண்டித்து, பொலிஸ் அதிகாரியின் வீட்டுக்கே அனுப்ப அங்கொட பிரியங்கர திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. எனினும், அந்தப் பணியை ஏகப்பட்ட நபர் கைது செய்யப்பட்டதால் அந்தச் சதி முறியடிக்கப்பட்டது.


பேருவளை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட 250 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளின் பெறுமதி ரூ. 1,200 கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 'தினூக' என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.ஒரு கிலோ கிராம் கொக்கெய்ன் சுமார் 4.5 கோடி ரூபாய் பெறுமதியானது.


இலங்கையிலுள்ள சில செல்வந்தர்களே இந்த கொக்கெய்ன் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த போதைப்பொருள் தென் அமெரிக்க நாடொன்றிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


போதைப்பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் படகு உரிமையாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.