Header Ads



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவராக தம்மிக பெரேரா நியமிக்கப்படவில்லை

 
இலங்கை விமான சேவை நிறுவனத்தின் (ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ்) தலைவராக தம்மிக பெரேரா நியமிக்கப்படவில்லை. இவ்வாறான முக்கிய நியமனங்கள் எக்காரணத்துக்காகவும் இரகசியமாக இடம்பெறாது. அவரை இந்த பதவிக்கு நியமிப்பது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் அரசாங்கத்தின் மட்டத்தில் இடம்பெறவுமில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஸ்ரீலங்கன் எயா லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளாரா என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,


இலங்கை விமான சேவை நிறுவனம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனை மேம்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். 4 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்கு வரவழைப்பதே எமது இலக்காகும். இவ்வாண்டு 2.5 மில்லியன் என்ற இலக்கை அண்மித்துள்ளோம்.


எனவே எமக்கான ஒரு தனித்துவமான விமான சேவையொன்று காணப்படுவது மிக முக்கியத்துவமுடையதாகும். அதற்கமையவே அதனை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இலங்கை விமான சேவை நிறுவனத்தின் தலைவராக தம்மிக பெரேரா நியமிக்கப்படவில்லை.


அவ்வாறான முக்கிய நியமனங்கள் வழங்கப்பட்டால் நிச்சயம் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும். எக்காரணத்துக்காகவும் இவ்வாறான நியமனங்கள் இரகசியமாக முன்னெடுக்கப்பட மாட்டாது. இது தொடர்பான நிலைப்பாடு குறித்து அரசாங்க மட்டத்தில் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என்றார்.


(எம்.மனோசித்ரா)

No comments

Powered by Blogger.