தம்மை படுகொலை செய்ய திட்டம், வெலிகம பிரதேச சபைத் தலைவர் எழுதிய கடிதம்
படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, உயிர் அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி இந்த கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பாதாள உலகக் குழுக்களின் ஊடாக தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் லசந்த தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களின் ஊடாக தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் இது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் தமக்கு அறிவுறுத்தல் வழங்கியதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றத்திற்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் அல்லது பிரதேச சபையில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் தம்மை படுகொலை செய்வதற்கு அவர்கள் முயற்சிப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment