காசா யுத்தத்தை நிறுத்துமாறு நிசாம், மனோ, சுமந்திரன் அமெரிக்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை
இன்று (29) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் பணியாளர் குழு (ஹவுஸ் டெமோக்ரசி பார்ட்னர்ஷிப் – HDP) (U.S. Congressional Staff Delegation from the House Democracy Partnership), பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரை சந்தித்தது.
இந்தச் சந்திப்பில் தமிழ் பேசும் தமிழர் மற்றும் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும், அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை உருவாக்குவதற்கான வழிகள் குறித்து ஆழமாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக மாகாண சபைத் தேர்தல்களின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
சந்திப்பு நடைபெறும் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டி, அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
குழு உறுப்பினர்கள் இதை ஏற்றுக்கொண்டு, அமெரிக்காவும் அதன் தலைவரும் யுத்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியத்தை ஒப்புக்கொண்டனர்.

Post a Comment