உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம்களுக்கு கிடைத்துள்ள பதவிகள்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஒரு மாநகர சபை மேயர், இரண்டு பிரதி மேயர்கள், ஒரு நகர சபை தவிசாளர் மற்றும் இரண்டு நகர சபை பிரதித் தவிசாளர்கள், இரண்டு பிரதேச சபைகளுக்கான தவிசாளர்கள் மற்றும் ஏழு பிரதேச சபைகளில் பிரதி தவிசாளர்களாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவாகியுள்ளனர்.
தேசிய காங்கிரஸ் சார்பில் தலா ஒவ்வொரு மேயர், பிரதி மேயர், பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி பிரதேச சபை தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு நகர சபைக்கான தவிசாளரும் ஒரு பிரதி தவிசாளரும் தெரிவாகியுள்ளனர்.
இதனிடையே தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒரு மாநகர பிரதி மேயரும், ஒரு நகர சபை பிரதித் தவிசாளர், ஒரு பிரதேச சபை தவிசாளர் மற்றும் ஆறு பிரதேச சபைகளில் பிரதித் தவிசாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் 275 பிரதேச சபைகள் உள்ளடங்கலாக 339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுப்பு 2025.05.06 ஆம் திகதியன்று நடைபெற்றது. இந்நிலையில் 339 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகியது.
339 உள்ளூராட்சி மன்றங்களில் 161 உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் நியமனத்தில் சிக்கல் காணப்படாத நிலையில் குறித்த உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் மாநகர மேயர், பிரதி மேயர், நகரபிதா, பிரதி நகர பிதா, பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட 2438/92 ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் இந்த விபரங்கள் வெளியாகின.
14 மாநகர சபைகளுக்கான மேயர்கள், பிரதி மேயர்கள், 12 நகர சபைகளுக்கான நகர தவிசாளர், பிரதித் தவிசாளர், 135 பிரதேச சபைகளுக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்கள் உள்ளடக்கிய 161 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த விபரங்களின் அடிப்படையில் ஒரு மாநகர சபைக்கு முஸ்லிம் பிரதிநிதியொருவர் மேயராகவும் இரண்டு மாநகரங்களில் பிரதி மேயர் பதவி முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அத்தோடு, ஒரு நகர சபை தவிசாளர் மற்றும் இரண்டு நகர சபைகளில் பிரதி தவிசாளர் பதவிகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனிடையே, ஒரு பிரதேச சபையின் தவிசாளர் பதவியும் ஏழு பிரதேச சபைகளில் உப தவிசாளர் பதவியும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு கிடைத்துள்ளன.
இதன்படி அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவாகியுள்ளார். அத்தோடு, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக தே.கா. உறுப்பினர் உதுமா லெப்பை உவைசின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொலன்னறுவை மாநகர சபை பிரதி மேயராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முஹம்மது முனாஸ் முஹம்மது ஹுஸைனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக சாஹுல் ஹமீது முஹம்மது அஸ்பரும் பிரதித் தவிசாளராக முஹம்மத் இப்றாஹிம் முஹம்மத் ஜெசீம் ஆகியோர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஊடாக தெரிவாகியுள்ளனர். அத்துடன், தேசிய மக்கள் சக்தி சார்பில் மினுவாங்கொடை நகர சபையின் பிரதி தவிசாளராக துவான் கிச்சில் சுரையா பர்வீன் தெரிவாகியுள்ளார்.
மேலும் வத்தளை பிரதேச சபை தவிசாளராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பிரிஹான் முஹம்மத் ஆப்தீனும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளராக தேசிய காங்கிரஸ் உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் ராசிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதித் தவிசாளராக அப்துல் மனாப் அஸ்ஹர் (தே.கா.), குருநாகல் பிரதேச சபை பிரதித் தவிசாளராக அப்துல் ஹாதி நாஷிக் அஹமத் (தே.ம.ச.), பொல்கஹவலை பிரதேச சபை பிரதித் தவிசாளராக முஹம்மது தாஹா முஹம்மது அக்ரம் (தே.ம.ச.), திரப்பனே பிரதேச சபை பிரதித் தவிசாளராக அப்துல் காதர் முஹம்மது நியாஸ் (தே.ம.ச.), பலாகல பிரதேச சபை பிரதித் தவிசாளராக சாலி முஹம்மது முஹம்மது சிராஜ் (தே.ம.ச.), வெலிமடை பிரதேச சபை பிரதித் தவிசாளராக மூஸா லெப்பை முஹம்மது சப்வான் (தே.ம.ச.) மற்றும் வெல்லவாய பிரதேச சபை பிரதித் தவிசாளராக முஹம்மத் சுபைர் முஹம்மத் அப்துல் நிசாம் (தே.ம.ச.) ஆகியோரது பெயர் விபரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 161 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் பெயர்களை அத்தாட்சிப்படுத்தி 25 நிர்வாக மாவட்டங்களுக்குரிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஒரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ தனித்து பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாத நிலையில் 178 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் நியமனங்களில் சிக்கல் நிலை காணப்படுகிறது. இதனால் தான் 161 உள்ளூராட்சி மன்றங்களை மாத்திரம் வரையறுத்து வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் தலையீட்டுடன் 178 உள்ளூராட்சி மன்ற அதிகாரசபைகளுக்கான நியமனங்கள் வெவ்வேறு தினங்களில் இடம்பெறவுள்ளன. இந்த நியமனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தலை விடயதானத்துக்கு பொறுப்பான பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பிரசுரிப்பார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.- Vidivelli
Post a Comment