Header Ads



மேயர் தெரிவில் சதி இல்லை, தோல்வியடைந்த சஜித் அணி பொய்களைக் கூறிப் புலம்புவதை நிறுத்த வேண்டும்


கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவில் எந்தச் சதியும் நடக்கவில்லை. தோல்வியடைந்த சஜித் அணியினர் பொய்களைக் கூறிப் புலம்புவதை நிறுத்த வேண்டும் என்று கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராகத் தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள விராய் கெலீ பல்தசார் தெரிவித்தார்.


தேசிய மக்கள் சக்தியின் தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் சதியாலேயே கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி இழந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக  முன்னர் தெரிவித்திருந்தார்.


இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் விராய் கெலீ பல்தசார் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவு விவகாரத்தில் எமது கட்சியின் தலைவர் ஜனாதிபதியோ அல்லது எமது கட்சியின் உயர்பீடமோ தலையிடவில்லை. ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடைபெற்றது. 61 உறுப்பினர்கள் எனக்கு ஆணை வழங்கினார்கள்.


கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்ற சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் பல வழிகளில் வியூகங்களை வகுத்தனர். ஆனால், அவர்களின் வியூகம் இறுதியில் தோல்வியடைந்துவிட்டது.


தற்போது அவர்கள் பொய்களைக் கூறிப் புலம்பத் தொடங்கியுள்ளனர். மேயர் தெரிவில் எந்தச் சதியும் நடக்கவில்லை. தோல்வியால் புலம்புவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.


கொழும்பு மாநகரத்தின் செயற்றிட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.