Header Ads



தனது உயிரைப் பணயம் வைத்து, பேரழிவைத் தடுத்த சமந்த பெர்னாண்டோ


இன்று (05) கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த ஒருவரால் தடுக்க முடிந்துள்ளது. 


கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. 


சேதமடைந்த ரயில் பாதையைக் கண்டதும், சமந்த பெர்னாண்டோ என்ற நபர் விரைந்து செயற்பட்டு, அந்நேரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 


தனது உயிரைப் பணயம் வைத்தும் கூட, ஒரு பெரிய பேரழிவைத் தடுத்த சமந்த பெர்னாண்டோவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 


இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், 


மகனின் வீட்டுக்கு அருகில் இருந்தேன். பெண்ணொருவர் ரயில் பாதையை அவதானித்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைத்து தண்டவாளம் உடைந்துள்ளதாக தெரிவித்தார். பின்னர் நான் அங்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது ரயில் ஒலி எழுப்பிக் கொண்டு வந்துக்கொண்டிருப்பதை அவதானித்தேன். உடனடியாக வீட்டுக்குச் சென்று ஆடையொன்றை எடுத்துக்கொண்டு, ரயில் வரும் போது தண்டவாளத்தின் நடுவே சென்று ரயிலுக்கு ஆடையை காண்பித்து அசைத்துக் காட்டினேன். பின்னர் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த அதிகாரியிடம் தண்டவாளம் உடைந்துள்ளது என்றேன். பின்னர், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அங்கு வந்து தண்டவாளத்தை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 


இந்த சம்பவத்தின் காரணமாக பாணந்துறையிலிருந்து மொரட்டுவை வரையிலான கரையோர ரயில் சேவைகள் தாமதமடைந்தன. 


பின்னர் ரயில்வே ஊழியர்கள் ரயில் பாதையை சரி செய்தனர். 


சேதமடைந்திருந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பிறகு ரயில் சேவைகள் தற்போது வழக்கம் போல் இயங்குவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.