Header Ads



கம்மன்பில திணறக்கூடாது, பிள்ளையான மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சி

 

(இராஜதுரை ஹஷான்)


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்காக  பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. உபவேந்தர் ஒருவரை கடத்தி, காணாமலாக்கிய குற்றச்சாட்டுக்காகவே கைது செய்யப்பட்டார். குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி ஒருவரை கைது செய்துள்ளதாக அனுதாபத்தை ஏற்படுத்தவே உதய கம்மன்பில முயற்சிக்கிறார் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.


கொழும்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் தொடர்பில்  கடந்த காலங்களில் சிங்கள பௌத்தவாதம், தேசியவாதம் பற்றி பேசிக்கொண்டிருந்த உதய கம்மன்பில தற்போது பேசுகிறார்.


உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக பிள்ளையானை மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக உதய கம்மன்பில சொல்லிக்கொண்டு திரிகிறார்.  குண்டுத்தாக்குதல் விவகாரத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்படவில்லை.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஒருவரை கடத்தி காணாமலாக்கிய குற்றச்சாட்டின் விசாரணைகளுக்கு அமைவாகவே  முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.


குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அப்பாவி ஒருவரை அரசாங்கம் கைது செய்துள்ளதாக அனுதாபத்தை ஏற்படுத்தவே உதய கம்மன்பில முயற்சிக்கிறார். 


பிள்ளையான் 2015 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறையில் இருந்தார். 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்று உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். 


பிள்ளையான் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உதய கம்மன்பில ஏன் முந்திக்கொள்கிறார். கம்மன்பில திணறாமல் சற்று அமைதியுடன் இருக்க வேண்டும். பிள்ளையான் தேசிய வீரன் என்று உதய கம்மன்பில குறிப்பிடுகிறார். இதனை ஏற்றுக்கொள்வதா என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.