ருஸ்தி தொடர்பில் இன்று, பாராளுமன்றத்தில் அமைச்சர் கூறிய விடயங்கள்
( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
கொழும்பு கட்டடத்தில் ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்புக்கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக்கொண்டிருந்த 25 நபர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தவர்களுடன் இவர் தொடர்புகொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இந்த இளைஞனின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு பிணையளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்ற பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பட்டலந்த விவகாரத்தில் ஒருசில விடயங்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சம்வத்தையும் மறக்க முடியாது. 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடக்கு மக்களின் தேர்தல் உரிமை கொள்ளையடிக்கப்பட்டு, யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. இதன் பின்னரே 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது. 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் தூண்டிவிடப்பட்டது. இதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது.
ஜே. ஆர். ஜயவர்த்தன - பிரேமதாச அரசாங்கம் இந்த நாட்டின் இளைஞர்களை படுகொலை செய்தது. இதில் பிரதானவொன்றாக தான் பட்டலந்த சித்திரவதை முகாம் உள்ளது. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த சித்திரவதை முகாம் மற்றும் படுகொலை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கையை போன்று அதனுடன் இணைந்த நான்கு பிரதான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த விடயங்களுக்கு அவதானம் செலுத்தியுள்ளோம். கொழும்பில் உள்ள பிரதான வர்த்தக கட்டடத்தில் வைத்து அண்மையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த இளைஞனின் தொலைப்பேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
இந்த இளைஞனின் தொலைபேசியில் இருந்த தொலைபேசி இலக்கங்கள் பயங்கரவாதி சஹ்ரானின் உபதேச வகுப்புகளில் பங்குப்பற்றியவர்களுடன் தொடர்புடையது என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருடன் இந்த இளைஞன் தொடர்புக் கொண்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இளைஞன் இயக்கிய யூடியுப் செயலினை அந்த நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த இளைஞன் தவறான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரால் தேசிய பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் 2025.03.22 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்புக் கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக் கொண்டிருந்த 25 நபர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தவர்களுடன் இவர் தொடர்புக்கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து தொடர்ச்சியான விசாரணைகள் இடம்பெறுகிறது.
இந்த இளைஞன் தனிமையில் வாழ்ந்துள்ளதாக அவரது பெற்றோர் குறிப்பிடுகின்றனர். இவர் முறையாக மத கல்வியை பெறாமல், இணைய வழிமுறை ஊடாக மத கல்வியை பெற்றுக்கொண்டுள்ளார்.தன்னால் தற்கொலைதாரியாக மாற முடியும் எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். இந்த இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் பல விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இளைஞன் விடயம் தொடர்பில் அத்தனகல நீதிமன்றத்தின் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த இளைஞனின் தந்தை தலைமறைவாகியுள்ளார். இவரின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவருக்கு பிணையளிக்கப்பட்டுள்ளது.விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவரும் தொடர்புடையதாக குறிப்பிடப்படுகிறது. எந்த குற்றத்தையும் நா ங்கள் மூடி மறைக்க போவதில்லை என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், நீங்கள் தற்போது மாறுப்பட்ட விடயத்தை குறிப்பிடுகின்றீர்கள். இந்த இளைஞனை கைது செய்யது தொடர்பில் எங்கும் குறிப்பிட வேண்டாம்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு செல்ல வேண்டாம் என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அவரது பெற்றோருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்தில் ஸ்டிக்கர் ஒட்டியதற்காகவே இளைஞரை கைது செய்தார்கள். அதன் பின்னரே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதற்கு எழுந்து உரையாற்றி அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் தான் ஆரம்பத்தில் இருந்து மாறுப்பட்ட நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளீர்கள் என்றார்.
Post a Comment