சஹ்ரான்தான் சூத்திரதாரி, டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்தினால் உக்ரைனின் நிலையே இலங்கைக்கு ஏற்படும்
எவ்பிஐயின் விசாரணைகள் உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் சூத்திரதாரி ஜஹ்ரான் ஹாசிமே என தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இலங்கை வேறுவிதமான கதைகளை ஊக்குவிப்பது டிரம்பிற்கு சீற்றத்தினை ஏற்படுத்தும் அவர் மேலும் வரிகளை விதிப்பார்,உக்ரைனின் அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராக நடந்துகொண்டது போல இலங்கைக்கு எதிராக நடந்துகொள்ளலாம் இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடைபெற்ற பின்னர் அவ்வேளை அமெரிக்க ஜனாதிபதியாகயிருந்த டிரம்ப் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசினார் எவ்பிஐயின் உதவியை வழங்கினார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நான் அமெரிக்க தூதுவரை தொடர்புகொண்ட தருணத்தில் ஏற்கனவே எவ்பிஐ குழுவொன்று இலங்கை வந்திருந்தது,அதன் பின்னர் ஜனாதிபதி டிரம்ப் என்னுடன் பேசவிரும்புகின்றார் என தெரிவித்தார்கள்,நாங்கள் தொலைபேசி மூலம் உரையாடினோம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவ்வேளை ஜனாதிபதி டிரம்ப் எவ்பிஐயின் உதவி உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கினார்.அதன் பின்னர் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது எவ்பிஐமுகவரும் கலந்துகொண்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்பிஐ முகவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த தருணத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது அவ்வேளை டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்தார் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார்,அன்று எவ்பிஐ முன்னெடுத்த விசாரணை அறிக்கை ஜஹ்ரான் ஹாசிமே சூத்திரதாரி என தெரிவிக்கின்றது என நான் நினைக்கின்றேன் நாங்கள் இதனை மீண்டும் குழப்பினால் என்ன நடக்கும்? ஜனாதிபதி டிரம்பிற்கு கோபத்தை ஏற்படுத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் அறிவீர்கள் எங்களால் எதனையும் செய்யமுடியாது யாருக்கு கோபத்தை எற்படுத்தக்கூடாது என்பது எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment