Header Ads



74 வயது மூதாட்டி மீது பாலியல் தொல்லை - போதை பொருளை ஒழிப்போம் என மக்கள் ஆர்ப்பாட்டம்


 - எஸ் சதீஸ் -

 

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இனைந்து இன்று (23) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்


”குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலை நாட்டு”, ”கைது செய் போதை குற்றவாளியை கைது செய்”, ”போதை பொருளை ஒழிப்போம்” போன்ற பாதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்திற்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக தெளிவுபடுத்திய பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்


”சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.


குறித்த சந்தேகநபரை நேற்று (22) ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 20ஆம் திகதி குறித்த தோட்டபகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு வீட்டில் மூதாட்டி தனிமையில் இருந்த வேளையில் மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த இளைஞன் மூதாட்டியை பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட 74வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.