Header Ads



ஜனாஸா எரிப்பு - பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வலியுறுத்தி முஜிபுர் பேசிய விடயங்கள்


கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய எடுத்த தீ்ர்மானம் எமது நாட்டு மக்களின் இன மத குழுமத்தின் மத கலாசார நம்பிக்கையை உரிமையை மதிக்காமல் எடுத்த தீர்மானமாகும். அதனால் அந்த அரசாங்கம் எடுத்த இந்த தீர்மானம் தெரிந்துகொண்டு எடுக்கப்பட்டதா அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா என்பதை நாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.


அதற்காக இதுதொடர்பில் விசாரணை நடத்த பாராளுமன்ற விசே தெரிவுகுழு அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதை தவிர்த்து தகனம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து பொருத்தமான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரிஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முன்வைத்த தனி நபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


கொவிட் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு  வெளியிட்டிருந்த வழிகாட்டலை அனைத்து நாடுகளும் பின்பற்றின. யாரும் அதனை மறுக்கவில்லை. ஆனால் துரதி்ஷ்டவசமாக அப்போது இருந்த ஆட்சியாளர்கள் உலக சசுகாதார அமைப்பின் வழிகாட்டலை ஏற்றுக்கொள்ள மறுத்ததன் மூலம் பாரிய குற்றத்தை செய்த ஆட்சியாளர்களாக அந்த ஆட்சியாளர்கள்  வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். அதனை யாராலும் மறைக்க முடியாது. ஏனெனில் இந்டத தீர்மானத்தை அவர்கள் திட்டமிட்டு, பழிவாங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகும்.


அத்துடன் இந்த நடவடிக்கை குறிப்பிட்ட ஒரு மக்கள் இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டது அல்ல. தகனம் மற்றும் அடக்கம் என்பது ஒரு மதத்துக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல. ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தால் தமிழ், முஸ்லிம், சிங்கள, கிறிஸ்தவ இனத்தவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அதனால் இது எமது நாட்டு மக்களின் இன குழுமத்தின் மத கலாசார நம்பிக்கை உரிமையை மதிக்காமல் எடுத்த தீர்மானமாகும். அதனால் அந்த அரசாங்கம் எடுத்த இந்த தீர்மானம் தெரிந்துகொண்டு எடுத்ததா அல்லது தெரியாமல் எடுத்ததா என்பதை நாங்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.


அதனால் இதுதொடர்பில் தேடிப்பார்க்க நம்பகத்தன்மை மிக்க விசாரணை குழுவொன்று அவசியமாகும். அதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை அமைத்து விசாரணை மேற்கொள்வதே பொருத்தமாகும். பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்க முடியும்.


அத்துடன் இந்த சம்பவத்துக்காக முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கோரினார். அவர் அரசியல்வாதிகளுக்காக இதனை செய்தார்.  அரசியல்வாதிகள் தவறு செய்ததாலே முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கோரினார்.ஆனால் இதில் இருந்த அரச அதிகாரிகளும் இந்த விடயத்தில் இருந்து அப்போது இருந்த அரசாங்கத்துக்கு ஆலாேசனை வழங்கி வந்தார்கள்.


 தற்போதுள்ள சுகாதார அமைச்சின் செயலாளரே அன்று கோட்டபாய ராஜபக்ஷ் அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர்குழுவின் தீர்மானங்களை ஊடகங்களுக்கு தெரிவிக்கும் ஊடக பேச்சாளராக இருந்து வந்தார். அவர் இந்த விடயத்தை தெரிந்துகொண்டு செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.


அதனால் இதுதொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்ள விசாரணை மேற்கொள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்றார்.


(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)


No comments

Powered by Blogger.