Header Ads



மத்திய கிழக்கு நிலைமை மோசமடைந்தால், இலங்கையின் நிலை எப்படியிருக்கும்..? கலாநிதி பிரியங்கா துனுசிங்க


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிலைமை மேலும் மோசமடைந்தால் அதன் எதிர்மறையான தாக்கம் இலங்கையை பல பகுதிகளில் பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களும், இலங்கையிலிருந்து அந்தப் பிராந்தியத்திற்கான இறக்குமதிகளும் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்தார்.


மத்திய கிழக்கு நாடுகளில் பாரிய அளவிலான  இலங்கை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இலங்கையின் பொருளாதாரம் ஓரளவு மீண்டு வருவதற்கான பிரதான காரணமாக இருப்பதே வெளிநாடுகளில் வாழும்  இலங்கை பணியாளர்களாகும்.


ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை ஏற்பட்டால், இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பகுதி கடும் தாக்கத்திற்குள்ளாகும்.


அதிகளவிலான தொழிலாளர்கள் பணியை இழக்க நேரிடும். புதிய தொழில்களுக்காக வெளிநாடு செல்வதில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகின்றது.


இவ்வாறான ஆபத்தான நிலைமை ஏற்பட்டால் ஏற்றுமதி முழுமையாக பாதிக்கப்படும். அத்துடன் சுற்றுலா துறைக்கு மாத்திரமின்றி இந்த நாட்டில் எரிபொருள் விலைகளும் இதன் மூலம் அதிகரிக்கலாம்.


நாட்டின் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது.


எவ்வாறாயினும், பல நாடுகளுக்கு தேர்தல் ஆண்டாக இருப்பதால், முக்கிய உலகத் தலைவர்கள் போர் சூழலுக்குள் செல்வதைத் தடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரக் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.