Header Ads



4 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பெண் ஒருவரின் மர்ம மரணம்


காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.


குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால், அவர் கொலை செய்யப்பட்டு, மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த நிலுக்ஷிகா சந்தமாலி என்ற 29 வயதான மூன்று பிள்ளைகளின் தாயின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் மலசலகூட குழியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.


தனது முதலாவது கணவரை பிரிந்த நிலுக்ஷிகா சந்தமாலி, தனது இரண்டு பிள்ளைகளுடன் “பதல சாந்த” என அழைக்கப்படும் நபருடன் வாழ்ந்து வந்த நிலையில், காணாமல்போயிருந்ததாக தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் மேலதிக விசாரணைகள், காலி குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை நடாத்திய பொலிஸார், குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரை கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தில் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளதாகவும், சடலத்தை மலசலகூட குழியில் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, சடலம் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.