Header Ads



கடலில் குழந்தை பிரசவித்த பெண்


யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்பியூலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால் , பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.


அந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்தவேளை , பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து , படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.


படகு குறிகட்டுவான் இறங்குதுறையை வந்தடைந்ததும் , அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின்அம்பியூலன்ஸ் வண்டியில் தாயையும் சேயையும் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.


தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


யாழ்.விசேட நிருபர்

1 comment:

  1. இக்கட்டான தருணத்தில் உதவிய அத்தனை தாய்மாார்களுக்கும் எமது பணிவான நன்றிகள். தாய், குழந்தையின் ஆரோக்கியமான வாழ்வுக்கு எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.