Header Ads



கையடக்க தொலைபேசி சின்னத்தில் களமிறங்க ரணில் திட்டமா..?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புதிய சின்னத்தில் பொதுக் கூட்டணியில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஜனாதிபதித் தேர்தலில் தனது நட்புக் கட்சிகளுடன் இணைந்து தேசிய வேட்பாளராக போட்டியிடுவதே ஜனாதிபதியின் விருப்பமாகும்.


தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.


அமைச்சர் திரான் அலஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் கட்சி மறுசீரமைக்கப்பட்டதன் பின்னர், அக்கட்சியை பொதுக் கூட்டணியாக மாற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர்.


ஐக்கிய மக்கள் கட்சியின் தேர்தல் சின்னம் கையடக்க தொலைபேசியாக காணப்படும் எனவும் கூறப்படுகின்றது.


அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ​​ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவில் தமக்கு ஆதரவளிக்குமாறு பசிலிடம் ரணில் கோரிக்கை விடுத்திருந்தார்.


அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் பொதுஜன பெரமுன நிர்வாக சபையிடமும் விசாரிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு பசில் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதேவேளை, பசிலுக்கும் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது நன்மை பயக்கும் என கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.