Header Ads



சாதாரண மத பிரிவினர் பெரிய தாக்குதலை எவ்வாறு நடத்தினர், கையாள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது


 ரஷ்யாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிவித்திருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல் ரஷ்யா செயற்பட்டுள்ளது என கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.


“ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும்“ நூல் வெளியிட்டு விழா மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.


குறித்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில். “இலங்கையில் ஈஸ்டர் படுகொலை போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் இருக்க நாம் எமது சமூகத்தை எவ்வாறு கையாள போகின்றோம், எதிர்காலத்தில் இதனை எவ்வாறு தடுப்பது, தொடர்ந்தும் அமைதியான சூழலை தக்க வைப்பது இந்த சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என நாம் சிந்திக்காமல் இருக்க முடியாது.


அந்த வலியையும் வேதனையும்தான் நாம் ஆரம்பத்தில் இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கின்றோம்.


தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களை மிகக் கவனமாக கையாள வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. சேனல் 4 வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் சில அரசியல்வாதிகள் எங்களை நோக்கி கை காட்டினார்கள்.


சாதாரண மத பிரிவினர் இவ்வாறொரு பெரிய தாக்குதலை எவ்வாறு நடத்தினார்கள் என்ற சாத்தியத்தை பலரது கேள்விக்கு இந்தப் புத்தகம் பதில் கூறுகின்றது.


இந்தக் குண்டு வெடிப்புக்கு பின்னால் உள்ள சக்தி என்ன, நோக்கம் என்ன, அவர்களின் கொள்கைகளை இந்த புத்தகம் வெளிக்கொண்டு வருகின்றது.


எமது நாட்டின் மக்களின் நிலையான சமாதானத்தோடு பொருளாதாரத்திற்காக பாடுபடுகின்ற மக்கள் என்ற அடிப்படையில் ஏனைய அரசியல் கட்சிகள் போன்று நாம் சாதாரணமாக சிந்தித்து விட முடியாது. இந்த மக்களை வழிநடத்துகின்ற அரசாங்கமாகவே நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.


அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் என்ற ரீதியில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டிய தேவையில் நாங்களும் இருக்கின்றோம்” எனவும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.