Header Ads



ரேடியோவை நிறுத்திய, தந்தை படுகொலை


பாடிக்கொண்டிருந்த வானொலி பெட்டியை நிறுத்திய 62 வயதான தந்தை, அவருடைய மகனால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவமொன்று தங்கொட்டுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.


தந்தையை படுகொலைச் செய்த 26 வயதான மகன், பொலிஸாரினால் திங்கட்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளார்.


தன்னுடைய வீட்டில் உள்ள வானொலி பெட்டியின் சத்தத்தை ஓகஸ்ட் 31ஆம் திகதி இரவு, மகன் அதிக சத்தத்துடன் கேட்டுக்கொண்டிருந்துள்ளார்.  எனினும், சத்தம் அதிகமாக இருந்தமையால், சத்தத்தை குறைக்குமாறு   மகனுக்கு தந்தை அறிவுறுத்தியுள்ளார். 


அதற்கு செவிசாய்க்காமையால், வானொலி பெட்டியை தந்தை நிறுத்திவிட்டார். இதனால், தந்தைக்கும் மகனுக்கும்  இடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அதனையடுத்தே தந்தையை மகன் தாக்கியுள்ளார்.


கீழே விழுந்த தந்தையை சந்தேகநபரான மகன், தங்கொட்டுவ வைத்தியசாலையில் தானே ஒப்படைத்துள்ளார்.


தன்னுடைய தந்தை வீட்டுக்கு  முன்பாக அமர்ந்திருந்த போது சந்தேகநபர்கள் சிலர் தன்னுடைய தந்தையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வைத்தியசாலை அதிகாரிகளிடம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.


மேலதிக சிகிச்சைகளுக்காக அந்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் திங்கட்கிழமை (04) மரணமடைந்தார்.


கடுமையான வருத்தத்தில் இருந்தமையால், அவரினால் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளிக்கமுடியவில்லை.


இனந்தெரியாதவர்கள் அல்ல,அவருடைய மகனே, தந்தையை தாக்கியுள்ளார் என்று தங்கொட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.


கிடைத்த தகவலின் பிரகாரம் அவருடைய மகனை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன்போதே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்துள்ள தங்கொட்டுவ பொலிஸார், சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.  

No comments

Powered by Blogger.