Header Ads



ரொஹானின் நூல் வெளியீட்டில், முஸ்லிம்களிடம் ஏற்பட்ட பிளவு


- AAM. Anzir -


பயங்கரவாத நிபுணரும், பேராசிரியருமான ரொஹான் குணரத்ன “Sri Lanka’s Easter Sunday Massacre - Lessons for the International Community.” என்ற பெயரில் கொழும்பில் நூலொன்றை  அண்மையில் வெளியிட்டிருந்தார்.


ரொஹான் குணரத்ன இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயற்பட்டார் என்ற அடிப்படையில், ரொஹான் குணரத்னவின் நூல் வெளியீட்டில் முஸ்லிம்கள் பங்குபற்றக் கூடாதென முஸ்லிம் தரப்பு தீர்மானித்திருந்தது.


அதேவேளை தனது நூல் வெளியீட்டிற்கு, அதீதிகளில் ஒருவராக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை,  ரொஹான் குணரத்ன அழைத்திருந்தார்.


இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை, வெளிவிவகார அமைச்சில் சந்தித்த முஸ்லிம் தரப்பினர்,  ரொஹான் குணரத்னவின் நூல் வெளியீட்டில்  பங்குகொள்ளக் கூடாதென  வற்புறுத்தியுள்ளனர்.


இதன்போது முஸ்லிம் தரப்பினரின் கோரிக்கையை நிராகரித்த, அலி சப்ரி, நான் ரொஹான் குணரத்னாவில் நூல் வெளியீட்டில் நிச்சயம் பங்கேற்பேன் என, முஸ்லிம் தரப்பிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அலி சப்ரியும் இதனை ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தி, ரொஹான் குணரத்னவின் நூல் வெளியீட்டில் தான் பங்குபற்றியது அவரின் மேடையில் இஸ்லாம் குறித்தும், குர்ஆன் பற்றியும் எடுத்துக்கூறவே என்றார். அத்துடன் தான் அந்நிகழ்வில் உரையாற்றிய வீடியோவையும் ஜப்னா முஸ்லிம் இணைய வட்சப்புக்கு அனுப்பியிருந்தார்.


இங்கு மற்றுமொரு விடயமும் நடந்தேறியுள்ளது. அதாவது ரொஹான் குணரத்னவின் நூல் வெளியீட்டில் அலி சப்ரியை பங்கு பற்ற வேண்டாமெனக்கூறிய முஸ்லிம்களில் சிலரே, அவரின் நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டமை ஆகும்.


முஸ்லிம்களிடம் நிலவும் ஒற்றுமை நிலை பற்றிய பலவீனம், இச்சம்பவத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளமை இங்கு கவலைக்குரியது எனவும், ரொஹான் குணரத்னவின் நூல் வெளியீட்டில் பங்கு கொள்ள வேண்டாமென அலி சப்ரியிடம் தூது சென்றவர்களே இறுதியில், அந்நிகழ்வில் பங்கு பற்றியமை கவலைக்குரியது என முஸ்லிம் அமைப்பொன்றின் தலைவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.