Header Ads



குவைத்தில் தூக்கிலிடப்பட்ட இலங்கையரினால், குழப்பத்தில் அதிகாரிகள்


குவைத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு தூக்கிலிடப்பட்ட இலங்கையர் ஒருவரின் மரண விசாரணை நேற்று -02- நீர்கொழும்பு மாநகரசபை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன முன்னிலையில் ஆரம்பமானது.


எனினும் உயிரிழந்தவரின் மனைவிகள் என கூறி மூன்று பெண்கள் முன்னிலையாகியதால் விசாரணை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.


அநுராதபுரம், கல்கடவல, சூர இசுருகம பகுதியைச் சேர்ந்த வீரசிங்க ஆராச்சிலாகே ஜூட் ரவீந்திர பெரேரா என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவரின் மனைவி எனக் கூறப்படும் குறித்த முகவரியில் வசிக்கும் எஸ்.திஸாநாயக்க முதியன்சேலாகே என்பவர் சாட்சியமளித்துள்ளார்.


“உயிரிழந்தவர் நான் திருமணம் செய்துக் கொண்ட எனது கணவராகும். எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. நான் ஓமானில் வேலை செய்கிறேன். கடற்படையில் சிப்பாயாக பணியாற்றி வந்த அவர், பின்னர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.


தனது தந்தை குவைத்தில் தூக்கிலிடப்பட்டதை யூடியூப்பில் பார்த்ததாக எனது மகன் என்னிடம் தெரிவித்தார். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதை அறிந்தவுடன் இலங்கை வந்தேன்.


அவரது உடல் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று தூக்கிலிடப்பட்டார் என்பதை அறிந்தேன். இறந்த எனது கணவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் திருமணம் நடந்தது பின்னரே தெரிய வந்தது.


நான் கணவனின் உடலை ஏற்க விரும்பவில்லை. ஆனால், இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.


இறந்தவரின் சகோதரர் ஒருவர் சாட்சியம் அளித்ததுடன், சடலத்தை ஏற்றுக்கொள்ள தாய் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.


இறந்தவரின் மனைவிகள் என கூறப்படும் பெண்களின் அடையாளத்தை சரிபார்த்து, அவர்களை பிள்ளைகளின் தகவல், திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்களுடன் இன்று பரிசோதனைக்கு முன்னிலைப்படுத்துமாறு மரண விசாரணை அதிகாரி சிறி ஜயந்த விக்கிரமரத்ன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

No comments

Powered by Blogger.