Header Ads



புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்ட 33 வருட ஞாபகார்த்த நிகழ்வு


- பாறுக் ஷிஹான் -


புலிகளிடம் சரணடைந்த சுமார் 600  பொலிஸார் மிலேட்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டு 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஸ்டிக்கும் முகமாக நிகழ்வு ஒன்று இன்று(11) அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் முன்பாக நினைவு தூபியில் நடைபெற்றது.


குறித்த நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் தமயந்த விஜய சிறி அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.டீ.ஜே.ரத்னாயக்க    உள்ளிட்ட  பொலிஸ்  உயரதிகாரிகள்   பொலிஸார்  ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள்  பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு கடத்திக் கொல்லப்பட்ட பொலிஸார் உட்பட யுத்தத்தினால் உயிர்நீத்த மற்றும்  கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின்  குடும்பங்களில் உள்ள சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்   வழங்கும் செயற்பாடுகள்  இதன் போது முன்னெடுக்கப்பட்டன.


இது தவிர நிகழ்வின் ஆரம்பத்தில்  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா  அதிபர் தமயந்த விஜய சிறியினால் பொலிஸ் கொடி அரை கம்பத்தில் ஏற்றப்பட்டதுடன்  உயிர்நீர்த்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  


 

1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பொத்துவில் அக்கரைப்பற்று சம்மாந்துறை உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களை முற்றுகையிட்ட  புலிகள் சகல சிங்கள முஸ்லிம் போலீசார்களையும் ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அதன் பின்பு திருக்கோவில் பகுதியில் உள்ள ரூபஸ்குளம்  காட்டுப் பகுதியில் சகல பொலிசாரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.