Header Ads



டுபாயில் இலங்கையர் படுகொலை - நடந்த கொடூரமும், தாயின் உருக்கமான வேண்டுகோளும்


குடும்ப வறுமை நிலை காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில், குடும்பத்தினர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இரு சகோதரர்கள் வேலைக்காக சென்றிருந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றைய சகோதரனை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக அவரது தாயார் ஐ.பி.சி ழுக்கு தெரிவித்துள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 


யாழ்ப்பாணம் சுண்டுக்குழி பதியைச் சேர்ந்த 26 வயதுடைய கமலதாஸ் நிலக்சன் மற்றும் அவருடைய சகோதரரான 22 வயதுடைய கமலதாஸ் டிலக்சன் ஆகியோர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் துபாய்க்கு வேலைக்காக சென்றிருந்தனர்.


இந்நிலையில், நிலக்சன் என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இருவரும் விடுதியொன்றில் பணியாற்றி வந்த நிலையில், இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


கொலை செய்யப்பட்ட நபருடன் இரு மலையாள நபர்கள் காலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், பின்னர் மாலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை குறித்த இளைஞன் துபாயிலுள்ள இந்திய பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவர் மூலமாக பல இலட்சம் ரூபாய்கள் கடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறெனினும் படுகொலைக்கான காரணம் தெரியவராத நிலையில், உயிரிழந்தவரின் சடலத்தையும், தனது இரண்டாவது மகனான டிலக்சனையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு அவர்களது தாயார் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


படுகொலை செய்யப்பட்ட இளைஞனின் கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, அடையாள அட்டை என்பனவும் திருடப்பட்டு சாட்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதனால் காவல்துறையினரும் குறித்த விடயம் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியாதுள்ள நிலையில், தனக்கும் போதியளவு வசதியின்மையால் எதனையும் செய்ய முடியாதுள்ளதாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.


எனவே இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடிய தரப்பினர் உரிய உதவிகளை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.