Header Ads



அரசாங்கத்துடன் எவரேனும் இணைந்தால், அவர்களுடைய நோக்கம் இதுதான்


எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்துடன் இணைவார்களாயின் அவர்களின் நோக்கம் பணமும் , அமைச்சுப்பதவிகளுமே தவிர நாட்டின் அபிவிருத்தி அல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார். 


 அமைச்சுப்பதவியில் மோகமும், 200 மில்லியனை விரும்புபவர்களுமே அரசாங்கத்துடன் இணைவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


ஆளுந்தரப்பினர் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை. மாறாக எவரேனும் இணைவார்களாயின் அது 200 மில்லியன் ரூபாவுக்கும், அமைச்சுப்பதவிகளுக்குமேயாகும். 200 மில்லியனை விரும்புபவர்களும் இருக்கக் கூடும்.


அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் இணைவது நாட்டுக்காக அல்ல. மக்களுக்கு நன்மையான திட்டங்களுக்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே நிச்சயம் ஒத்துழைப்பினை வழங்குவோம். அதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டுமென்ற தேவை கிடையாது.


பிரதான எதிர்க்கட்சியாக நாம் எமது கடமைகளை நிறைவேற்றுவோம். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னரே 2019இல் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம்.


அன்று நாம் கூறியதை முற்றாக எதிர்த்தவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறியவுடன் , மேசைகளைத் தட்டி கரகோஷம் எழுப்புகின்றனர்.


இவ்வாறான இரட்டை நிலைப்பாடுடையவர்களே அரசாங்கத்தில் உள்ளனர். எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்தில் இணைவார்களாயின் அமைச்சுக்கள் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் மீதான சுமை மேலும் உயர்வடையுமே தவிர , நாட்டுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.