Header Ads



"இறுதியில் நாம் எதுவும் இல்லாமல், நடுவீதியில் நிற்கப் போகின்றோம்"


 நாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்கள், வளங்கள் அனைத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று இறுதியில் நாம் எதுவும் இல்லாமல் நடுவீதியில் நிற்கப் போகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நாட்டில் இருக்கின்ற எதையாவது விற்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் கூறுகின்றார். இதைத்தான் ரணிலின் மாமா ஜே.ஆர் ஜெயவர்தனாவே செய்துள்ளார்.


கடந்த 1978ஆம் ஆண்டில் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் என்ற பெயரில் பல நிறுவனங்களை ஜே.ஆர் ஜெயவர்தன விற்றார்.


அதையே இப்போது மருமகனும் செய்கின்றார். இப்படியே எல்லாவற்றையும் விற்று விற்று இருப்பதற்கு இடம்கூட இல்லாமல் வீதிக்கு வரப் போகின்றோம். அதிக வளங்கள் உள்ள நாடு இது.


நல்ல திறமையான மனித வளங்கள் அதிகம் உள்ளன. எவற்றையும் அரசாங்கம் பயன்படுத்தாமல் எல்லாவற்றையும் விற்பதில்தான் குறியாக இருக்கின்றது.


மறுபுறம், பாடசாலைகளில் 40000 ஆசிரியர்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளிலும் இதே நிலைமை. விசேட வைத்திய நிபுணர்கள் இன்மையால் அனுராதபுர பொது வைத்தியசாலையில் சிறுவர் பிரிவு மூடப்பட்டுள்ளது.


ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர்கள் இல்லாததால் அங்கும் கற்பிப்பதில் பிரச்சினை. இப்படியே நாட்டின் பல்வேறு துறைகள் சிக்கி இருக்கின்றன. மக்கள் மூன்று நேரமும் சாப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


இவ்வாறு நாட்டின் சொத்துக்களை விற்பதன் மூலம் நாடு மேலும் சிக்கலுக்குள் விழுமே தவிர முன்னேறாது. நாட்டைப் பொருளாதார ரீதியாக வீழ்த்தியது மக்கள் அல்லர். ஆட்சியாளர்களே இதைச் செய்தார்கள்.


பெட்ரோலியத்தை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது மக்கள் அல்லர். ஆட்சியாளர்கள்தான் இதைச் செய்தார்கள்.


இப்படி எல்லா வீழ்ச்சிக்கும் ஆட்சியாளர்களே காரணம். இதுவரை விற்கப்பட்ட நிறுவனங்களால் அரசாங்கம்  இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட நம்மை என்ன? என கேள்வியெழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.