Header Ads



சுவிட்சர்லாந்தின் 2 வது பெரிய வங்கிக்கு ஏற்பட்ட பரிதாபம்


சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான Credit Suisse வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டம் பெரும் கூச்சல் குழப்பத்தை சந்தித்தது.


கடந்த மாதம், அதாவது, மார்ச் மாதம், 15ஆம் திகதி, Credit Suisse வங்கியின் பங்குகளின் விலைகள் சுமார் 25 சதவிகிதம் குறைந்தது.


வங்கியின் முக்கிய முதலீட்டாளரான சவுதி தேசிய வங்கி, Credit Suisse வங்கிக்கு மேலும் கூடுதல் நிதி உதவி செய்யமுடியாது என அறிவித்ததைத் தொடர்ந்து, உலகமே அதிர்ச்சியடையும் வகையில் Credit Suisse வங்கியின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.


இந்நிலையில், Credit Suisse வங்கியின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோபம் கொண்ட பங்குதாரர்கள், வங்கியின் இயக்குநர்கள் மீதான தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினார்கள். பல மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியது.


கூட்டத்தில், பங்குதாரர்களில் ஒருவரும், Credit Suisse வங்கியின் முன்னாள் ஊழியருமான Francesco De Giorgi என்பவர், கண்ணீர் மல்க, வங்கியை இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆளாக்கியதற்கு கண்டனம் தெரிவித்தார்.


அத்துடன், உங்கள் பணத்தை சுவிட்சர்லாந்தில் சேமிப்பது இனி பாதுகாப்பானது அல்ல, இது வங்கிமற்றும் அதன் வாரியத்தின் தவறு என தெரிவித்தார்.


தான் Credit Suisse வங்கியின் முன்னாள் ஊழியர் என்பதற்காக வெட்கப்படுவதாக தெரிவித்த Francesco, இந்த வீழ்ச்சிக்கு தானும் பொறுப்பு என்பதுபோல் உணர்வதாக தெரிவிக்க, கூடியிருந்தோர் கரவொலி எழுப்பினர். 


Credit Suisse குழுமத்தின் தலைவரான Axel Lehmann, வங்கியின் வீழ்ச்சிக்காகவும், அதன் இயக்குநர்களின் இயலாமைக்காகவும் பங்குதாரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.


அவர் மன்னிப்புக் கோரியதற்கு, சிலர் அரை மனதாக கைதட்ட, மற்றவர்களோ ஊளையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஏற்கனவே ஏற்பட்டுள்ள இழப்பிற்கு மன்னிப்பு கேட்பது மிகவும் தாமதம் என்றும், மன்னிப்புக் கோருவது என்பது மிகவும் குறைவு என்றும் பல பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.