அதிக சத்தமிடும் ஒலிபெருக்கி, வீதியில் கிரிக்கெட், கேளிக்கைகளை நிறுத்துங்கள்
- எம்.எம்.அஸ்லம் -
ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்கள் பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டுமென கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து மேற்படி பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“ரமழான் நோன்பு என்பது ஓர் உன்னதமான வணக்கமாகும். இது இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற மக்களை புடம்போட்டு, புனிதப்படுத்துகின்ற ஒரு வணக்க வழிபாடாகும். சகிப்புத்தன்மையையும் பிறருக்கு தீங்கிழைக்காமல், உதவும் மனப்பாங்கையும் வளர்த்துக் கொண்டு, இறையச்சத்தை திடப்படுத்துகின்ற ஒரு வணக்கமாகும். இவற்றை உணர்ந்து செயற்படுகின்றபோதே எமது நோன்பு அர்த்தமுள்ளதாக அமையும்.
“ஆனால், இப்புனிதமிகு மாதத்தில் சில பிரதேசங்களில் இரவு நேரங்களில் முஸ்லிம் இளைஞர்கள் வீதிகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டு, பிறருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் ஒவ்வொரு ரமழானிலும் ஊடகங்களில் பேசுபொருளாக இருந்ததை அறிவோம். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இதனால் பிற மதத்தினர் மத்தியில் இஸ்லாம் மார்க்கம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் தப்பபிப்பிராயங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.
“அவ்வாறே, பள்ளிவாசல்களில் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்வுகளுக்காக ஒலிபெருக்கிகள் அதிக சத்தத்துடன் பாதிக்கப்படுவதும் பிறருக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது என்பதை பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் உலமாக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“முஸ்லிம்களால் கூட ஜீரணித்துக் கொள்ள முடியாமல் வெறுக்கப்படுகின்ற இவ்வாறான விடயங்களை பிற மதத்தினர் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்துகொள்ள வேண்டும்.
“இந்த ரமழானை சமூக ஒற்றுமையைப் பேணுவதற்கும் மாற்று இனங்களுடன் ஐக்கியமாக வாழ்வதற்குமான ஒரு களமாக அமைத்துக் கொள்ள வேண்டுமேயொழிய இன ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்” என கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

Post a Comment