Header Ads



எர்துவானை எதிர்த்து களமிறங்கும் 'துருக்கியின் காந்தி'


துருக்கியில் வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை எதிர்த்துப் போட்டியிட பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு வழக்கமாக பிளவுபட்டிருக்கும் எதிர்க்கட்சிகள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.


இதன்படி மதச்சார்பற்ற பிரதான எதிர்க்கட்சியான மைய இடதுசாரி குடியரசு மக்கள் கட்சியில் கெமால் கிலிக்டரொக்லு இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளார். எர்துவானின் ஆட்சி இரண்டு தசாப்தங்களாக நீடிக்கும் நிலையில் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.


பொருளாதார நெருக்கடி மற்றும் கடந்த மாதம் இடம்பெற்ற பூகம்பத்தை கையாள்வதில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக முந்தைய தேர்தலை விடவும் இம்முறை தேர்தல் எர்துவானுக்கு பாதகமானதாக மாறியுள்ளது.


இந்நிலையில் முன்னாள் அரச ஊழியரான கிலிக்டரொக்லு ஆறு கட்சிகளின் எதிர்க்கட்சி கூட்டணியாலேயே பொது வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை வகித்த மகாத்மா காந்தியின் பெயரை குறிக்கும் வகையில் ‘காந்தி கெமால்’ அல்லது ‘துருக்கியின் காந்தி’ என்று அழைக்கப்படும் 74 வயது கிலிக்டரொக்லு, மக்கள் செல்வாக்கு மிக்க எர்துவானில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக பார்க்கப்படுபவராவார்.


நவீன துருக்கியின் நிறுவனரான முஸ்தபா கெமால் அதாதுர்க்கினால் நிறுவப்பட்ட குடியரசு மக்கள் கட்சி, நாட்டின் மிகப்பழைய அரசியல் கட்சியாகவும் உள்ளது. எனினும் அது 1990கள் தொடக்கம் ஆட்சியை பிடிக்க தவறி வருகிறது.

No comments

Powered by Blogger.