Header Ads



கோட்டாபய மூளையில்லாதவர், நரி போன்ற ரணிலை விரட்டியடிப்பது எளிதானதல்ல


ரணில் விக்ரமசிங்க ஒரு நரி போன்றவர், எப்படியாவது தந்திரோபாயங்களை மேற்கொண்டு உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றார் என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 


ஆகவே தென்பகுதி மக்களைப் போன்று வடகிழக்கு மக்களும் தேர்தலை நடத்துமாறு தமது கோரிக்கைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


திருகோணமலை, மூதூர் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 


“வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக மறைமுக சதி இடம்பெறுகின்றது. மொட்டு கட்சியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடவில்லையென பசில் ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்தார். ஆனால் அவர் பல்வேறு சுயட்சைக் குழுக்களை வடக்கு கிழக்கில் இறக்கியுள்ளார்.


அதற்காக வியாழேந்திரன், பிள்ளையான் போன்றோரின் கட்சிகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கிழக்கில் படகிலும் வடக்கில் வீணையிலும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக பசில் முன்னர் ஒரு முறை கூறியிருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.


இதேவேளை,  முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மூளையில்லாதவர். ஆனால் தற்போதைய அதிபர் நரி போன்றவர். ஆகவே கோட்டாபயவை போன்று ரணிலை இலகுவில் விரட்டியடிக்க முடியாது.


கோட்டாபயவை பதவியிலிருந்து நீக்குவதற்காக தென்பகுதியில் நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நாமும் களத்தில் நின்றோம். எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.


ஆனால் ரணிலை விரட்டியடிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்காக பலமான போராட்டங்கள் செய்யப்பட வேண்டும். எனவே தேர்தலை நடத்துமாறு தென்பகுதி மக்களைப் போன்று வடக்கு கிழக்கு மக்களும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் பிள்ளையான், வியாழேந்திரன் போன்றோருக்கு திருகோணமலையில் இடம் கிடைத்தால், திருகோணமலையிலுள்ள மண் உள்ளிட்ட ஏனை வளங்களை விற்றுவிடுவார்கள்.


ஆகவே அவர்களுக்கு திருகோணமலை மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம். நீங்கள் கொடுக்க மாட்டீர்கள் என்று எமக்கு நன்றாகவே தெரியும். எத்தனை கட்சிகள் வந்தும் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிக்க நினைத்தாலும் தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்தினையே ஆதரிப்பார்கள் என்றும் எமக்கு தெரியும். ஆகவே தமிழ் மக்களுக்காக எமது பயணம் தொடரும்” எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.