Header Ads



காட்டிலிருந்த புலி உறுப்பினர் பற்றி அவரது உறவினர்கள் கூறும் தகவல்கள்


மட்டக்களப்பு - தாந்தாமலைக் காட்டுப் பகுதியிருந்து புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாக கூறி, பொய்யான செய்திகளை சிலர் வெளியிட்டு அதன்மூலம் இலாபமடைய முயற்சிப்பதாக போராளியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 


நேற்றைய தினம் (13.03.2023) மட்டு. ஊடக அமையத்தில் முன்னாள் போராளியின் உறவினர்கள் ஊடக சந்திப்புகளின் கலந்துகொண்டபோதே மேற்கண்டவாறு கருத்துகளை முன்வைத்துள்ளனர்.


அண்மையில் மட்டக்களப்பு - தாந்தாமலை காட்டிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியொருவர் மீட்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்ததுடன், சிலர் அதனை வைத்து தமது தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அவர் நடுக்காட்டில் மீட்கப்படவில்லை. தாந்தாமலை, ரெட்பானா எனப்படும் நடு ஊருக்குள் இருந்தே மீட்கப்பட்டார். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்தார்.


அதன் பின்னர் அதிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த நிலையில், 2007ஆம் ஆண்டு அவரது மனைவி அவரை பிரிந்து சென்றார். அத்துடன், கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் உள்ள எங்களது வீட்டுக்கு வந்து சிறிது காலம் வசித்த பின்னர் தாந்தாமலையில் உள்ள தமது பரம்பரை வீட்டில் வசிக்கப்போவதாக அங்குச் சென்று வசித்து வந்தார்.


அது எங்கள் பரம்பரை வீடாகும். அது காடு அல்ல. ஊருக்கு நடுவில் உள்ள எமது காணியாகும். அங்குச் சென்று அவர் 15 வருடத்திற்கு மேல் வசித்து வருகின்றார்.


அவர் சில வருடங்களாகவே இந்த நிலைமையில் உள்ளதாகவும் முன்னர் அவர் தமது காணியில் பயிர்செய்கைகள் முன்னெடுத்து தன்னை தானே பார்த்துவந்த நிலையில், கடந்த சில வருடங்களாக இவ்வாறு இருந்ததாகவும் எனினும் தான் மாதத்திற்கு இரண்டு தடைவ சென்று அவருக்குத் தேவையான உணவுப்பொருட்களை வழங்கிவந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


அவரை கடந்த காலத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்ல முயற்சித்தபோதும், அவர் இணங்காத நிலையிலேயே இருந்து வந்ததாகவும் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.