Header Ads



பள்ளிவாசலை திருப்பித் தா, என ஆர்ப்பாட்டம்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் காத்தான்குடியில் சஹ்ரானுடன் தொடர்புடைய பள்ளிவாசல் என அரசாங்கம் பொறுப்பேற்ற பள்ளிவாசலை அரச புலனாய்வு பிரிவின் காரியாலயமாக இயக்க முயற்சித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹர்தால் அனுஷ்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் (06.02.2023) காத்தன்குடி ஆலீம் வீதியில் இடம்பெற்றுள்ளது.


புதிய காத்தான்குடி கப்பல் ஆலீம் வீதியிலுள்ள ஜாமிஉல் ஆதர் ஜும்ஆ பள்ளிவாசலை பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றிருந்தது.


இந்த பள்ளிவாசலில் புலனாய்வு பிரிவு திறப்பதற்கு முயற்சித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காத்தான்குடி பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் கூட்டமைப்பு “பள்ளிவாசலை பாதுகாப்போம்” எனும் தலைப்பில் அறவழிப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.


இதனையடுத்து, வர்த்தக நிலையங்கள், அரச நிறுவனங்கள், பொதுச்சந்தைகள், வங்கிகள், பாடசாலைகள் என அனைத்தும் மூடப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.


இந்த நிலையில், அரசு கையடக்கிய பள்ளிவாசலின் முன்னால் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் ஒன்று திரண்டு புனித இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி பள்ளிவாசலை நாசப்படுத்தாதே, பள்ளிவாசலை விடுவித்து பொது மக்கள் தொழுவதற்கும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் இடமளிக்கவும்.


பொலிஸார் மீது பொது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீரழிக்க வேண்டாம், இறைவனின் இல்லத்தை இல்லாமல் ஆக்காதே, பொலிஸ் திணைக்களமே பள்ளியின் புனிதத்தில் கறைபடிந்த வரலாற்று தவறை செய்யாதே, இனவாதம் வளர்த்து தேசத்தை சீரழிக்காதே, முஸ்லிம்களை வாழவிடு, மக்கள் தமது பணத்தில் கட்டிய பள்ளிவாசலை திருப்பி தா, இந்தப் பள்ளிவாசல் வக்பு சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பள்ளிவாயலாகும், இந்தப் பள்ளிவாசலை பொலிஸார் கையகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை...


போன்ற சுலோகங்கள் தொங்கவிட்டவாறு கோஷங்கள் எழுப்பி சுமார் ஒருமணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதன் போது, அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி இந்தப் பள்ளிவாசலுக்குள் பொலிஸார் வரமாட்டார்கள் என தெரிவித்ததையடுத்து, ஆர்ப்பாட்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். tamilw



No comments

Powered by Blogger.