Header Ads



நடமாடும் கழிவறைக்குகு மாத்திரம் ஒரு கோடியே 42 இலட்சம்


ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் இருந்து இலங்கை விடுதலை பெற்ற பெருமைக்குரிய 75வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஏனையோருக்கு நடமாடும் கழிவறை வசதிகளை வழங்குவதற்கு மாத்திரம் ஒரு கோடியே நாற்பத்தி இரண்டு இலட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது ரூபா (14,258,850.00) அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


26.01.2023 அன்று, லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜா சக்தி என்ற அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜமுனி கமந்த துஷாரா என்ற நபர், 2023 ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின கொண்டாட்ட செலவு மதிப்பீட்டை தனக்கு வழங்குமாறு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கோரியதற்கிணங்க அமைச்சு அளித்த தகவலில் மேற்கண்ட தரவு குறிப்பிடப்பட்டுள்ளது


அந்தத் தகவல்களின்படி, சம்பந்தப்பட்ட அமைச்சு 02.01.2023 அன்று மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவுகள் மற்றும் தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையை வெளிப்படுத்தியுள்ளது.


இதேவேளை, மேற்படி திகதி வரை சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்ட செலவினங்களில் மின்னல் கடத்தி அமைப்பை நிறுவுவதற்கு 345,000 ரூபா பணம் செலுத்தப்பட்டதுடன் ஆர்தர் சி. கிளார்க் சென்டருக்கு 20,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.


நிகழ்விற்குத் தேவையான தொலைக்காட்சிப் பெட்டிகள், மின் விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் பெறுவதற்கு 519,225 ரூபாவும், இலத்திரனியல் திரைகளுக்கான இருபத்தி ஏழு இலட்சத்து தொண்ணூற்று மூவாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபா (2,793,750.00) மற்றும் ஒலி அமைப்புக்கு முப்பத்திரண்டு இலட்சத்து ஏழாயிரத்து எண்ணுறு ரூபாவும் (3,207,800.00) சம்பந்தப்பட்ட அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை அதிதிகளுக்கான நாற்காலிகளை கொள்வனவு செய்வதற்கு 955,650 ரூபாவும் மலர்க்கொத்துகளை பெற்றுக்கொள்ள 40,000 ரூபாவும் சம்பந்தப்பட்ட அமைச்சு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன், சுதந்திர கண்காட்சிக்கான அழைப்பிதழ்களை அனுப்புவதற்கும் அது தொடர்பான ஏனைய கடமைகளுக்கும் 100,000 ரூபாவை செலவிட்ட பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, எழுதுபொருட்கள் மற்றும் அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு 600,000 ரூபாவை செலவிட்டுள்ளது.


அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்ட நிகழ்வுக்கான கொடிகளை கொள்வனவு செய்வதற்காக அமைச்சு பதின்மூன்று இலட்சத்து எண்பதாயிரம் (1,380,000.00) ரூபாவை ஒதுக்கியுள்ளது மற்றும் அனைத்து விருந்தினர்களின் வரவேற்பு உட்பட உபசரிப்புக்காக பதினெட்டு இலட்சத்து நாற்பத்தொன்பதாயிரத்து இருநூற்று ஐம்பது (1,849,250.00) ரூபாவை செலவிட்டுள்ளது.


சுதந்திர தின கலாசார நிகழ்ச்சிகளுக்காக சுதந்திர சதுக்கத்தை புனரமைப்பதற்காக கடற்படைக்கு 330,000 ரூபாவும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது கடமையாற்றும் முழு காலத்திற்கும் போக்குவரத்து கட்டணமாக ஒரு மில்லியன் ரூபா கடற்படைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையின் 75வது சுதந்திர நினைவேந்தல் விழாவை நடத்தலாமா வேண்டாமா என்ற தீவிர விவாதத்தின் பின்னணியில், இவ்வளவு செலவில் சுமார் இருபது கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. (ரூ. 162 மில்லியன்)

எவ்வாறாயினும், பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட இந்த செலவுகள் 2023.01.02 வரையானவை என்பதுடன், பெருமைக்குரிய 75வது சுதந்திர தினம் அதன் பின்னர் 32 நாட்களின் பின்னர் நடைபெறவுள்ளது.


இந்த இடைப்பட்ட காலகட்டத்தின் பெருமைமிக்க சுதந்திரக் கொண்டாட்டங்களின் விவரங்கள் விரைவில் வெளிவரும்.


ஹிரு இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது

No comments

Powered by Blogger.