Header Ads



சுவீடனில் புனித குர்ஆன் எரிப்பு, கொந்தளிக்கும் இஸ்லாமிய நாடுகள், தலைநகரில் தொடரும் போராட்டம்


ஸ்வீடனில் நடந்த ஒரு போராட்டத்தின்போது இஸ்லாமிய மதத்தில் புனிதமாகக் கருதப்படும் குர்ஆன் பிரதி எரிக்கப்பட்ட சம்பவத்தை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இது “கேவலமான செயல்” என்றும் குறிப்பிட்டுள்ளது.


இத்தகைய போராட்டங்களை அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவு “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றும் துருக்கி தெரிவித்துள்ளது.


ராஜ்ஜீய மட்டத்தில் துருக்கிக்கும் ஸ்வீடனுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து வருகிறது.


போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு ஸ்வீடனிடம் துருக்கி கோரிக்கை விடுத்துள்ளதுடன், ஸ்வீடனின் பாதுகாப்பு அமைச்சர் பால் ஜான்சனின் துருக்கி பயணத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் இப்போது அதன் முக்கியத்துவத்தையும் அர்த்தத்தையும் இழந்துவிட்டதாக துருக்கி அரசு கூறுகிறது.


துருக்கியின் ஆட்சேபத்தைத் தொடர்ந்து, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் துருக்கிக்கு எதிராக வலதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, தீவிர வலதுசாரி கட்சியான ஸ்ட்ராம் குர்ஸின் தலைவரான ராஸ்மஸ் பலுதன், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று குர்ஆன் பிரதியை எரித்தார்.


துருக்கி, இஸ்லாமிய பெரும்பான்மை உடைய நாடு. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இந்தச் சம்பவத்தை விமர்சித்து ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் “தொடர்ச்சியான எச்சரிக்கைகள் இருந்தபோதிலும்” இது நடந்துள்ளது எனத் தெரிவித்தது.


“கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் முஸ்லிம்களை குறி வைத்து நம்முடைய புனிதமான விஷயங்களை அவமதிக்கும் இந்த முஸ்லிம் விரோத செயலை அனுமதிக்கும் இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இஸ்லாமோஃபோபியா, இனவெறி, பாகுபாடு ஆகியவை ஐரோப்பாவில் எச்சரிக்கை மணியை அடிக்கும் நிலையை எட்டியுள்ளன என்பதற்கு குர்ஆன் எரிப்பு சம்பவம் மற்றொரு சான்று என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைச் சமாளிக்க ஸ்வீடன் அரசாங்கம், “தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் டொபையாஸ் பில்ஸ்ட்ரோம் இந்தச் சம்பவம் “திகிலூட்டக்கூடியது” எனக் கூறினார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஸ்வீடனில் கருத்து சுதந்திரம் உள்ளது. ஆனால் அதற்காக, இங்குள்ள அரசோ அல்லது நானோ ஆர்ப்பாட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை ஆதரிக்கிறோம் என்று அர்த்தமில்லை,” என்று பதிவிட்டார்.


ஓஐசி பொதுச் செயலாளர் ஹிசின் பிரஹிம் தாஹாவும், ஸ்டாக்ஹோமில் உள்ள துருக்கிய தூதரகம் முன்பாக குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ளார். இவையனைத்தும் ஸ்வீடன் அதிகாரிகளின் அனுமதியுடன் நடந்ததாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.


இந்த விவகாரத்திற்கு, “ஸ்வீடனில் குர்ஆன் எரிப்பு சம்பவத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று பாகிஸ்தான் தனது கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.


“இந்த அறிவில்லாத, ஆத்திரமூட்டும் இஸ்லாமிய வெறுப்பு செயல் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களை எந்த வகையிலும் கருத்து சுதந்திரம் என்றோ சட்டபூர்வமான செயல் என்றோ கூற முடியாது. இஸ்லாம் அமைதியின் மதம். இஸ்லாமியர்கள் அனைத்து மதங்களையும் மதிப்பவர்கள். இந்தக் கொள்கையை அனைவரும் மதிக்க வேண்டும்,” என்றார்.


இஸ்லாமிய வெறுப்பு, சகிப்புத்தன்மை இல்லாமை, வன்முறையைத் தூண்டும் முயற்சிகளுக்கு எதிராகத் தீர்வு காண முன்வருமாறு மற்ற நாடுகளுக்கு பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.


இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரிஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


“ஸ்வீடனில் வலதுசாரி பயங்கரவாதிகள் மேற்கொண்ட, புனித குர்ஆனை அவமதிக்கும் செயலைக் கடுமையாகக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. உலகெங்கிலும் உள்ள ஒன்றரை பில்லியன் இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை, கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் புண்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.


இந்தச் சம்பவத்திற்கு சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


சௌதி வெளியுறவு அமைச்சகம் “விவாதங்கள், சகிப்புத்தன்மை, சகவாழ்வை ஊக்குவிப்பதில் சௌதி அரேபியா நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், வெறுப்பையும் பயங்கரவாதத்தையும் நிராகரிக்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளது.


போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதித்த ஸ்வீடன் அதிகாரிகளையும் கத்தார் விமர்சித்துள்ளது.


“இது இரண்டு பில்லியன் உலக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டும் மிகவும் தீவிரமான சம்பவம். கத்தார் மத அடிப்படையிலான அனைத்து வெறுப்புப் பேச்சுகளையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறது,” என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


பரஸ்பர புரிந்துணர்வைப் பற்றிப் பேசிய கத்தாரின் வெளிவிவகார அமைச்சகம், வெறுப்பு, பாகுபாடு, வன்முறை ஆகியவற்றைக் கண்டிப்பதற்கான பொறுப்பைக் கையில் எடுக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பேரணிகள் நடைபெற்று வருகின்றன.


கடந்த வாரம் ஸ்டாக்ஹோமில் நடந்த போராட்டங்களின்போது துருக்கிய அதிபர் ரிசெப் தையிப் அர்டோனின் உருவபொம்மை விளக்கு கம்பத்தில் தொங்கவிடப்பட்டது.


ஸ்வீடன் பிரதமர், “ஸ்டாக்ஹோமில் துருக்கிய அதிபரின் பொம்மையைத் தலைகீழாகத் தொங்கவிட்டவர்கள், நேட்டோவில் இணைவதற்கான ஸ்வீடனின் முயற்சிகளுக்குத் தீங்கு விளைவிக்க விரும்புவதாக” கூறினார்.


கடந்த ஆண்டும், ராஸ்மஸ் பலுதன் குர்ஆனை எரிக்கப் போவதாக மிரட்டி பல பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து ஸ்வீடனில் போலீசாருக்கும் கோபமடைந்த  தீவிர வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்கள் நடந்தன.

No comments

Powered by Blogger.