Header Ads



பரீட்சை காலத்தில் மின்சாரத்தை வெட்டியது ஏன்..? விசாரணைக்கு அழைக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு


உயர்தர பரீட்சைக் காலத்தில் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட ஆலோசனையை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.


எனவே, நாளை (25)  காலை 10.30 மணிக்கு ஆணைக்குழுவில் நடைபெறும் விசாரணைகளில் கலந்துகொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


கடந்த 23 ஆம் திகதி இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்பதை தாம் கண்காணித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இதேவேளை, நாளையும் (25) நாளை மறுதினமும் (26)  மின்வெட்டு மேலும் 20 நிமிடங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளது.


உயர் தர பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்சார துண்டிப்பை நிறுத்துமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று வௌியிட்ட அறிக்கையின் படி இன்றைய தினம் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாளையும் நாளை மறுதினமும் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, பகல் நேரத்தில் ஒரு மணித்தியாலமும் இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும். 

No comments

Powered by Blogger.