Header Ads



தலதா மாளிகையை அவமதிக்க, இந்த உலகில் எவருக்கும் உரிமை இல்லை


தலதா மாளிகை மற்றும் பௌத்தம் தொடர்பில் அவமதிப்பு கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும், சேபால அமரசிங்க என்பவருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


புனித தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில், அவர்,வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


புனித தலதா மாளிகை என்பது இலங்கையர்களுக்கு மாத்திரமல்ல. உலகம் முழுவதும் வாழும் பௌத்த மக்களின் அடையாளமாகும். எனவே தலதாமாளிகையை அவமதிக்க, இந்த உலகில் எவருக்கும் உரிமை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சேபால அமரசிங்க மிகவும் வெட்கக்கேடான வகையில் தலதா மாளிகையை அவமானப்படுத்தியுள்ளார் இதன் காரணமாக, பௌத்த உயர்பீடமும்,பௌத்த மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.


இலங்கை அரசியலமைப்பின்படி ஒருவர், தம்மை நாத்திகன் என்று கூற உரிமை உண்டு. அதனை நாம் தடுக்கபோவதில்லை. தாம் ஒரு சித்த சுயாதீனமற்றவர் என்று கூறவும் அவருக்கு உரிமையுண்டு. அதிலும் யாரும் தலையிடமுடியாது. எனினும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது ஒரு சமூக விரோத குழுவின் செயற்பாட்டை ஒத்ததாக உள்ளது.


அத்துடன் இது குற்றவியல் சட்டம், பிரிவு 290 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனடிப்படையில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்தல், மத நிந்தனை என்பவற்றுக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனையையும் விதிக்க முடியும்.


எனவே, வடக்கு கிழக்கின் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயலுவோருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.