Header Ads



போனஸ் வழங்க 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டமை குறித்து ரணில் ஆத்திரம் - உடனடி விசாரணைக்கு உத்தரவு


இரண்டு நிறுவனங்களும் நட்டத்தில் இயங்கும் நேரத்தில் போனஸ் வழங்கியமை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும்  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.


நட்டத்தில் இயங்கும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போனஸ் வழங்க வேண்டாம் என நிதியமைச்சு அறிவித்திருந்த போதிலும் சுற்றறிக்கைகளுக்கு மாறாக போனஸ் வழங்கப்பட்டதாக கிடைத்த அறிக்கையின் அடிப்படையிலேயே ஜனாதிபதியால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தையும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயையும் போனஸாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 4,200 பணியாளர்கள் உள்ளதோடு, அவர்களில் 5 இலட்சம் ரூபாய் மாதாந்த சம்பளம் பெறும் அதிகாரிகள் இருப்பதால் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் போனஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் 5,800 பணியாளர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு 13வது மாத சம்பளமாக தலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், போனஸ் வழங்குவதற்கு 58 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.