Header Ads



ஜனவரியில் அரசின் வரி வருமானம் 158 பில்லியன், செலவு 367 பில்லியன் ரூபா


ஜனவரி மாதத்தில் இதுவரை 158.7 பில்லியன் ரூபா மாத்திரமே வரியாக அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.


அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் உட்பட அரச செலவினம் ஜனவரி 27 ஆம் திகதி வரை ரூ. 367.8 பில்லியன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக 87.4 பில்லியன் ரூபாவும் ஓய்வூதியம், சமுர்த்தி மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு 29.5 ரூபாயும் செலவிட்டுள்ளது.


கடன் சேவைக்கான ஒதுக்கீடுகளை உள்ளடக்கிய மாதாந்த செலவு, அரசாங்கம் வருமானமாக ஈட்டும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


எனவே அரசாங்கம் திறைசேரி பத்திரங்கள், திறைசேரி உண்டியல்கள், மத்திய வங்கியிடமிருந்து தற்காலிக முற்பணங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து மேலதிக கொடுப்பனவுகள் போன்றவற்றின் ஊடாக நிதியை கோர வேண்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தி பல நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


எனினும் அரசாங்கம் சம்பளம் வழங்குவதையும் நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதையும் தவிர்க்க முடியாது.


வரி அதிகரிப்பு காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அரசாங்கம் பாரிய வரி வருமானத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு இல்லை என்றும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments

Powered by Blogger.