Header Ads



சூடு பிடிக்கும் தேர்தல் - ஜஸ்வர் உமருக்கு போட்டியாக, ரங்காவும் களத்தில் குதிப்பு


எதிர்வரும் ஜனவரி 14ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கால்பந்து சம்மேளன தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 40 வேட்புமனுக்களில் 23 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இங்கு தேசிய விளையாட்டு சங்கம் ஒன்றுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த இருவர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கால்பந்து நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் பதவியை வகித்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உபாலி ஹேவகெ இம்முறை தேர்தலில் அந்தப் பதவி தவிர, தலைமைப் பதவிக்கும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.


அதேநேரம் பிரதித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பீ.பி. பத்திரனவின வேட்புமனு அவர் 70 வயதைத் தாண்டி இருப்பதால் நிராகரிப்பதற்கு தேர்தல் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.


தற்போதைய விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க அண்மையில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட புதிய விளையாட்டு ஒழுங்குமுறை அடிப்படையிலேயே அவர்களின் வேட்புமனுக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள வயதுக் கட்டுப்பாடுகள் தேசிய விளையாட்டு சங்கங்களின் அதிகாரிகள் அல்லது அந்த சங்கங்களின் அங்கத்துவ பதவியை வகிக்க முடியுமான உச்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இலங்கை கால்பந்து சம்மேனத்தின் தேர்தல் ஜனவரி 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு ரீட் அவன்யுவில் இருக்கும் விளையாட்டு அமைச்சு கேட்போர் கூடத்தில் 56 லீக்குகளின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது. கால்பந்து சம்மேனத்தின் தலைவராக இதுவரை செயற்பட்ட ஜஸ்வர் உமர் மற்றும் அவரது போட்டியாளரான மனிலால் பெர்னாண்டோ தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா இம்முறை தலைமைப் பதவிக்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.


இதன்போது அவர்கள் இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பு மனுவை தேர்தல் குழு நிராகரித்துள்ளது. தலைமை பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்த கால்பந்து பயிற்சியாளர் சம்பத் பெரேராவின் வேட்புமனு அவர் பயிற்சியாளராக செயற்படுவதை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளது.


இதேநேரம் யாழ். கால்பந்து லீக்கின் தலைவர் எம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் நாவலப்பிட்டி கால்பந்து லீக்கின் தலைவர் ஜகத் குமார டி சில்வா ஆகியோர் தலைமைப் போட்டிக்கு முன்வைத்த வேட்புமனுக்களை தேர்தல் குழு ஏற்றுள்ளது.


இதில் எம்மானுவேல் ஆர்னோல்ட் தரப்பு, தலைவர், செயலாளர் மற்றும் பிரதித் தலைவர் ஆகிய மூன்று பதவிகளுக்கு வேட்புனுத் தாக்கல் செய்துள்ளார்.


இதில் ஸ்ரீரங்கா தரப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் தவிர ஏனைய பதவிகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


மறுபுறம் ஜஸ்வர் உமர் கால்பந்து நடுவராக செயற்படுவதாக குறிப்பிட்டு அவரின் வேட்புமனுவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலிக்கும்படி எதிர்ப்பை வெளியிடும் தரப்பினர் மேன்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். TN

No comments

Powered by Blogger.