Header Ads



கொழும்பில் தாய்லாந்து தூதுவரின் வீட்டையும் விட்டுவைக்காத திருடர்கள்


கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் வாசஸ்தலத்துக்குள் நுழைந்த மர்ம நபர் சுமார் 5000 ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 300,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து நாணயம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாசஸ்தலத்துக்கு வெளியில் நின்றிருந்த போதும், மற்றொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டிற்குள் இருந்த போதிலும் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சம்பவம் தொடர்பில் சந்தேநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். TL

No comments

Powered by Blogger.