Header Ads



பொலிஸாரின் வெட்கக்கேடான செயல்


அமைதியான மற்றும் முறையான போராட்டங்களைத் தடுக்கும் அதே வேளையில், நிராயுதபாணியான பொதுமக்களை காவல்துறையினர் தொடர்ந்து தாக்கி கைது செய்து வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.


நேற்று (12) மூன்று இடங்களில் நடைபெற்ற போராட்டங்களை காவல்துறையினர் அடக்கிய விதம் மிகவும் வெட்கக்கேடானது என அவர் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


களுத்துறையில் இருந்து கொழும்புக்கு நடைபயணமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்களான இரண்டு பெண்களும், அவர்களுக்கு ஆதரவளித்த மக்களும் கைது செய்யப்பட்டமை இதன் உச்சக்கட்டமாகும்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் அழைப்பாளர் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி இரண்டு பெண்களும் தமது எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தனர்.


அங்கு வாதுவ, பாணந்துறை ஆகிய இடங்களில் பேரணியை தடுத்த காவல்துறையினர் கொரகபொல பிரதேசத்தில் வைத்து இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.


இதற்கிடையில், இந்த சம்பவத்துடன் மற்றுமொரு சம்பவத்தின் காட்சியையும் சாலிய பீரிஸ் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.


அதில் சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர், பெண் காவல்துறை கான்ஸ்டபிளொருவரின் கழுத்தை பிடித்து தள்ளுவதான அவர் குறிப்பிட்டுள்ளார்.


எந்தவொரு காரணத்திற்காகவும் பெண்களை துன்புறுத்துவதும் ஒடுக்குவதும், அமைதியான போராட்டங்கள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது எந்த அடிப்படையும் இல்லாமல் கொடூரமாக தாக்குதல் நடத்துவதும் காவல்துறையினரின் வெட்கக்கேடான செயல் என சாலிய பீரிஸ் கண்டித்துள்ளார்.


மேலும் இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையினரின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதை மேலும் எடுத்துகாட்டுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

No comments

Powered by Blogger.