Header Ads



ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே முடியும்


 மறைந்த தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன தனது இளமைக் காலத்திலேயே அரச தலைவராக நாட்டைப் பொறுப்பேற்றிருந்தால் இலங்கை இன்று வளமான நாடாகியிருக்குமென்றும் அவருக்கு அடுத்தபடியாக அவரை ஒத்த அரச தலைவராக இருப்பதற்கு ரணில் விக்ரமசிங்க அவர்களால் மட்டுமே முடியுமென்றும் கோட்டே விகாரை பீடத்தின் பதிவாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் இரத்த உறவினரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அதற்கான ஆளுமை இருப்பதாக சுட்டிக்காட்டிய தேரர், இத்தலைவர்கள் அரசியல் மூலம் எதையும் சம்பாதிக்காமல், தமது சொத்துக்களை கூட மக்களுக்காக தியாகம் செய்துள்ளார்கள் என்றும் கூறினார்.

சரியான தலைமைக்கு அன்று அங்கீகாரம் கிடைக்காததாலேயே இன்று நாடு இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர்.ஜயவர்தனவின் 26ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு 07, ஜே.ஆர்.ஜயவர்தன மையத்தில் இன்று (01) நடைபெற்ற நிகழ்வில் விஷேட அனுசாசன உரை நிகழ்த்தியபோதே பெல்பொல விபஸ்ஸி தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கினார்.

மனிதர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களின் மதிப்பை பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். புத்தரைப் போலவே மற்ற முனிவர்களும் உயிருடன் இருந்தபோது எவரும் அவர்களின் மதிப்பை உணரவில்லை. அதேபோன்று ஜே. ஆர்.ஜயவர்த்தன உயிருடன் இருந்த காலத்தில் அவரின் பெறுமதி புரியவில்லை. இலங்கையில் உள்ள ஒவ்வொரு அரச தலைவர்களின் சிலைகளும் உருவாக்கப்பட்டன. ஆனால் ஜே. ஆர்.ஜயவர்த்தனவின் சிலை செய்யப்படவில்லை.

இன்று இருபத்தாறு வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஜனாதிபதி உட்பட அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து இந்த அறச்செயலை மேற்கொள்வது இக்குடும்பத்தின் நன்றியை காட்டுகிறது.

திம்பிரிகஸ்யாயே அசோகாராமாதிபதி  கெடஹெத்தே சோபித தேரர் செய்த விசேட உரையின்போது,

இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தன அவர்களின் சிறப்புகளை நினைவுகூரும் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. ஜயவர்தன அவர்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அரச தலைவராக இருந்தாலும் சரி ஒரே மாதிரியான மனிதாபிமானம் நிரம்பிய தலைவராக செயல்பட்டார்.

உலக அமைதி மாநாட்டில் “நஹி வெரேன வெரானி” என்ற புத்தரின் வார்த்தைகளால் உலகையே அமைதிப்படுத்தினார். அதனால்தான் ஜயவர்தனபுர மருத்துவமனை, தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களை உருவாக்க இலங்கைக்கு உதவி கிடைத்தது. இவை கடன்கள் அல்ல. அரசியல் மூலம் பெறப்பட்டவையும் அல்ல. இவை அமைதியைப் பரப்பியதன் மூலமும், உலகை ஒருங்கிணைத்ததன் மூலமும் பெறப்பட்ட உதவிகள் ஆகும்.

புத்தர் உலகுக்கு அறிவித்த அவரது வார்த்தைகளின் மதிப்பை இன்று நம் நாடு உணர்கிறது. இன்று நம் நாடு பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இவ்வேளையில் அனைவரும் வெறுப்பு இன்றி ஒன்றிணைந்து நெருக்கடியில் இருந்து வெளிவர உழைக்க வேண்டும். அதனால்தான் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் மதிப்பு அன்று இருந்ததை விட இன்று அதிகமாக உணரப்படுகிறது.

No comments

Powered by Blogger.